அளவுகடந்த மழைப்பொழிவினைக் காட்டும் நப்பூதனார், மழை பொழிகின்ற முறைமையை இலக்கியமாக்கும் பாங்கு எண்ணுதற்குஉரியதாகும். அதாவது, அலை பெருகிய கடல் நீரினை மேகமானது முகர்ந்து, சூல் கொண்டு எழிலோடு விளங்கிய மழைக்காலத்தில் பெருமழையாகப் பொழிகிறது என்கிறார். மழைப்பொழிவில் முல்லை நிலக் கடவுளாகிய திருமாலை இணைத்துப் பேசுகிறார். பிறிதோரிடத்தில், கார்கால மழையின் காரணமாகப் பெருகும் கான் யாறு தெருவில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை, ""கான் யாறு தழீஇய அகல் நெடும் புறவில்'' (முல்லை-24) என்கிறார். மேலும், போர் முடித்துத் தலைவன் மீண்டும் வரும் கார்கால பருவத்தொடக்கத்தில் வெண்மேகம் கருக்கொண்டு மழையைப் பொழிந்தது என்பதை, ""எதிர்செல் வெண் மழை பொழியும் திங்களில்'' (100) எனச் சுட்டுகிறார். இவ்வாறு முல்லைநில முதற்பொருளான மழைப்பொழிவு காலநிலையியல் கூறுகளைப் பெற்று புதுத்திறனாய்வு நோக்கிற்கு வழி வகுக்கிறது எனலாம்.