சீராமன் என்னும் சலவைத் தொழிலாளி கம்பரின் ஆடைகளைத் தனிக் கவனம் செலுத்தி வெளுத்துத் தருவது, தன் சலவைத் தொழிலுக்கே பெருமை தரும் என்று கருதினான். ஒருநாள் அவன் வெளுத்து வந்த ஆடைகளில் உள்ள வெண்மை, கம்பரின் உள்ளத்தைக் கவர்ந்தது. அதனால், அவர் கவிதையுள்ளத்தில் ஓர் அழகான கவிதை வெண்பாவாக வெளிவந்தது.
"சீராமன் என்ற சலவைத் தொழிலாளி, வெளுத்து வந்த ஆடையின் வெண்மையைக் கண்டு சிவபெருமான் தன் தலையிலுள்ள கங்கையின் வெண்மைதான் ஆடைகளில் போய்விட்டதோ என்று தன் தலையைப் பார்த்தான். பிரம்மன், வெள்ளைக் கலையுடுத்தி, வெள்ளைக் கமலத்தில் வீற்றிருக்கும் தன் மனைவி கலைமகளின் வெண்மைதான் அந்த ஆடையில் சென்று விட்டதோ என்று தன் மனைவியைப் பார்த்தான். செங்கமலக் கண்ணனாகிய திருமால் தன் சங்கிலுள்ள வெண்மைதான் ஆடையில் சென்று விட்டதோ என்று தன் கையில் உள்ள சங்கைப் பார்த்தார்' என்னும் பொருளில், சலவைத் தொழிலாளி வெளுத்து வந்த ஆடையில் உள்ள வெண்மையையும் மும்மூர்த்திகளையும் இணைத்து,
"சிரம்பார்த்தான் ஈசனயன் தேவிதனைப் பார்த்தான்
கரம்பார்த்தான் செங்கமலக்கண்ணன் - உரஞ்சேர்
மலைவெளுத்த திண்புயத்து வண்ணான்
கலைவெளுத்த நேர்த்திதனைக் கண்டு''
என்று கம்பர் பாடி பெருமைப்படுத்தினார்.