ஒருமுறை, திருமலைராயன் பட்டினத்தில் அரசவைப் புலவராக இருந்த அதிமதுரக் கவிராயருக்கும் கவி காளமேகத்துக்கும் இடையே ஏற்பட்ட போட்டியில் அற்புதமான பாடல் ஒன்று கிடைத்தது. "திருமால் அவதாரங்கள் பத்தினையும் ஒரு வெண்பாவில் பாடவேண்டும்' என்றார் அதிமதுரகவி. "பாதி வெண்பாவிலேயே பாடமுடியும்' என்றார் காளமேகம். அப்பாடல் இதுதான்:
""மெச்சுதிரு வேங்கடவா வெண்பாவிற் பாதியிலென்
இச்சையிலுள் சன்ம மியம்பவர் - மச்சாகூர்
மாகோலா சிங்காவா மாராமா ராமாரா
மாகோபா லாமா வாவா''
"திருவேங்கடத் திருமலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே! உன்னை நான் பாதி வெண்பாவிலேயே புகழ்ந்து பாடவிருக்கின்றேன். என்முன்னே தோன்றி அருள் தருவாயாக! என்று வேண்ட, பெருமாளும் தோன்றி அருள் செய்தார். மச்ச, கூர்ம, வராக, நரசிங்க, வாமன, பரசுராம, ரகுராம, பலராம கிருஷ்ண, கல்கி ஆகிய பத்து அவதாரங்களையும் கூறிவிட்டார்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வேப்பஞ் சேரியில் லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் உள்ளது. அங்குள்ள திருக்குளத்தில் மகாவிஷ்ணுவின் சிலை ஒன்று 21 அடி உயரத்தில் உள்ளது. அதில் பெருமாளின் பத்து அவதாரங்களும் ஒரே கல்லில் அமைந்துள்ளதே இதற்குச் சான்றாகும்.