வசை அல்ல... வாழ்த்தே!

படிக்காசுப் புலவர் ஒருமுறை கவசை என்ற கோயில்பாளையம் வந்தார். அங்கு பாலவேளாளர் தலைவர் மசக்காளி மன்றாடியார் தமிழ்ச் சங்கம் ஒன்றை நடத்தி வந்தார்.
Published on

படிக்காசுப் புலவர் ஒருமுறை கவசை என்ற கோயில்பாளையம் வந்தார். அங்கு பாலவேளாளர் தலைவர் மசக்காளி மன்றாடியார் தமிழ்ச் சங்கம் ஒன்றை நடத்தி வந்தார். மன்றாடியாரால் உபசரிக்கப்பட்ட படிக்காசுப் புலவர் தமிழ்ச் சங்கத்திற்கு வந்தார். அங்கு புலவராக வீற்றிருந்த பலர் பொதுமக்கள் போலக் காணப்பட்டனர். படிக்காசுப் புலவர் அவர்களை ஏளனமாகப் பார்த்தார்.

கவிதைப் போட்டி தொடங்கியது. பல்வேறு வண்ணப் பாடல்களைக் கவசைப் புலவர்கள் பல வடிவங்களில் பாடினர். படிக்காசுப் புலவரால் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாததால், தம் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

போட்டி விதிகளின்படி படிக்காசுப் புலவரின் விருதுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. தன் பல்லக்கையும் இழந்து படிக்காசுப் புலவர் வெறுங்கையுடன் கவசையிலிருந்து வெளியேறினார். தோல்வியைத் தழுவிய படிக்காசுப் புலவர் கோபமடைந்து ஒரு பாடல் பாடினார்.

""அஞ்சாலி மக்களும் சாணாரும் பாணரும் அம்பட்டரும்

செஞ்சாயக் காரரும் வேசையர் மக்களும் செந்தமிழைப்

பஞ்சாகப் பண்ணி ஒருகாசுக்கு ஓர்வண்ணம் பாடலுற்றார்

நஞ்சாகப் போச்சுதை யோஎன் தமிழ்கொங்கு நாடெங்குமே''

என்பது அப்பாடல். வசையாகப் பாடப்பட்டாலும் அப்பாடலை வாழ்த்தாகவே கொள்ளலாம். கார்மேகக் கவிஞரின் கொங்குமண்டல சதகத்திலும் அந்நிகழ்ச்சி பதிவாகியுள்ளது.

""நல்லார் புகழ்மசக் காளி கவசையில் நாவின்இசை

எல்லாம் சொலிநிலை நில்லாமல் பல்லக்கு இரவைபற்றிச்

சொல்லால் உயர்ந்த படிக்காசன் கட்டிச் சுமக்கக்கவி

வல்லார் அடித்துத் துரத்திய தும்கொங்கு மண்டலமே''

என்பது சதகப்பாடல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com