

சங்க காலத்தில் பல தொழில்கள் சிறப்புப் பெற்றிருந்துள்ளன. இத்தகைய தொழில் சார்ந்த பொருள்களுக்கு நல்ல மதிப்பும் தேவையும் இருந்துள்ளன. இப்பொருள்கள் சார்ந்து உள்நாட்டு வெளிநாட்டு வாணிபமும் நடைபெற்றுள்ளன.
சங்க இலக்கியங்களில் காணப்படும் தொழில் பற்றிய குறிப்புகளும் கருவிகள் பற்றிய குறிப்புகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இன்றைக்கு அறிவியல் வளர்ச்சியினால் பல நுண்ணிய பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், எந்த அறிவியல் வளர்ச்சியும் இல்லாத காலத்தில் பல நுண்ணிய பொருள்களை உற்பத்தி செய்து, அவற்றை அன்றாடம் பயன்படுத்தியும் உள்ளனர்.
பண்டைத் தமிழர்கள் அன்றாடம் பயன்படுத்திய பலவகை கருவிகளுள் மயிர்குறை கருவியும் ஒன்று. இன்றைக்கு நாம் இதை கத்திரிக்கோல் - கத்திரிகை என்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே கத்திரிக்கோலைத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
பத்துப்பாட்டுள் ஒன்றான பொருநராற்றுப்படையில் உள்ள ஒரு பாடலடி இதைச் சுட்டியுள்ளது. ""மயிர்குறை கருவி மாண்கடை அன்ன'' (பொருந. 29).
இதற்கு நச்சினார்க்கினியர், ""மயிரை வெட்டுகின்ற கத்திரிகையினுடைய மாட்சிமைப்பட்ட குழைச்சையொத்த'' என்கிறார்.
இச்சொல் பற்றிய குறிப்பு பண்டைக் காலத்திலேயே பல வகைப்பட்ட கத்திரிக்கோல்கள் இருந்துள்ளன என்பதைக் காட்டுகிறது. தலை முடியைச் சீர்செய்து கொள்ளும் ஒப்பனைக் கலையும் சிறந்திலங்கி இருந்துள்ளதையும் காட்டுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.