சொல் புதிது - 31

செல்பி புள்ள - செல்பி புள்ள'' என்று தமக்குக் கிடைத்த ஞானப் பாலில் குழந்தைகளின் பாட்டுச் சத்தம் காதை அடைக்கிறது..
Updated on
2 min read

செல்பி புள்ள - செல்பி புள்ள'' என்று தமக்குக் கிடைத்த ஞானப் பாலில் குழந்தைகளின் பாட்டுச் சத்தம் காதை அடைக்கிறது..

நெல்சன் மண்டேலா மறைவிற்குச் சென்றிருந்த ஒபாமாவின் செல்பி படத்தை உலகம் கண்டித்தது. பிரதமர் வேட்பாளராக இருந்த மோடி, காந்தி நகரில் வாக்குப் பதிவு செய்தபோது எடுத்துக்கொண்ட செல்பி படம் தேர்தல் நேரத்தில் பரபரப்பானது.

ஒருநாள் பத்து மணி நேரம் முயற்சி செய்தும் மனநிறைவாக செல்பி எடுக்க முடியாமல் மனம் ஒடிந்து தற்கொலை செய்து கொள்ள ஒருவர் முயற்சி செய்திருக்கிறார். இந்த வருடம் ஜூலை மாதம் 14 வயதுப் பெண் பிலிப்பின்சில் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் விழுந்து இறந்து போயிருக்கிறார். 15 வயதுப் பையன் முகத்திற்கு நேரே ஒரு கையில் துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் செல்பி எடுக்க முயன்றபோது தவறி விழுந்து பலத்த காயம் பட்டிருக்கிறான்.

அது என்ன செல்பி? தன்னைத்தானே எடுத்துக் கொள்ளும் படம்தான் Selfie.

கும்பிட்டக் கைகளுடன் கோயிலுக்குள்ளேயே தங்கள் வாழ்நாளிலேயே தங்கள் சிலைகளையும் படங்களையும் தாங்களே வைத்துக்கொண்ட தமிழ் அரசர்கள் இருக்கிறார்கள். சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் ஓய்மான் நல்லியக்கோடனை, இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார், ஓவியர் பெருமகன் என்று பாடுகிறார். ஓவியர் மகன் என்பது ஓய்மான் என்று மருவியது என்றும் தமிழ் நாட்டுக் குடிகளுள் ஓவியர் குடியும் ஒன்று போலும் என்று மா.இராசமாணிக்கனார் கூறுகிறார்.

கீழத் தஞ்சையில் சில ஊர்களில் எழுத்துக்காரர் தெருபோல இப்போதும் வண்ணக்காரர் தெருக்கள் உள்ளன. தனக்குத்தானே சிலை நிறுவுவதும் படம் எழுதி வைப்பதும் தமிழர்களுக்குப் புதிதல்ல. ஆனால் செல்பி புதிது.

1839இல் அமெரிக்கர் (ROBERT CORNELIUS) தன்னைத்தானே எடுத்துக்கொண்ட படம்தான் செல்பி வரலாற்றின் தொடக்கமாம். படக்கருவியை வைத்துவிட்டு ஓடிப்போய் அதன் எதிரே நின்று படம் எடுத்துக்கொண்டாராம். ஆனால், அது செல்பி என்று அழைக்கப்படவில்லை. 1900இல் கண்ணாடி முன் நின்று ஒருவர் தன்னைத்தானே படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதுவும் செல்பி என்று அழைக்கப்படவில்லை. 1914இல் 13 வயது ருஷ்ய நாட்டுச் சிறுவன் கண்ணாடி முன் நின்று தன்னைத்தானே எடுத்துக்கொண்ட படம்தான் பதின்ம வயதுச் சிறுவர்கள் எடுத்துக்கொண்ட படங்களில் முதலாவதாம். ஆனால், அதுவும் "செல்பி' என்று அழைக்கப்படவில்லை. ஏனெனில் செல்பி என்ற சொல் முதன் முதலில் 2002இல்தான் புழக்கத்திற்கு வந்துள்ளது. ஆஸ்திரேலிய இணையதள அமைப்புதான் செல்பி என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

2005இல் மை ஸ்பேஸ் இணைய தளத்தில் செல்பி படங்கள் வெளிவரத் தொடங்கின. 2006 க்குப்பின் இணையத்தில் முகநூல் வந்ததும் செல்பி இளைஞர்களிடம் செல்வாக்குபெறத் தொடங்கியது. தன்னைத்தானே எடுத்துக்கொண்ட படங்களை முகநூலில் நாள்தோறும் இடம்பெறச் செய்தார்கள்.

2010இல் செல்பேசியின் முன்புறமும் படமெடுக்கும் வசதி சேர்ந்தது. இது செல்பியின் செல்வாக்கை உயர்த்தியது. 2012இல் டைம் பத்திரிகையின் சொல்புதிரில் முதல் பத்து இடங்களில் ஒன்றாக செல்பி இடம் பெற்றது. 2013ஆம் ஆண்டின் சிறந்த சொல்லாக (ROBERT CORNELIUS) ஆக்ஸ்போர்ட் அகராதியால் நஉகஊஐஉ அறிவிக்கப்பட்டுள்ளது. முகநூலில் ஒரு குறிப்பிட்ட வாரத்தில் 3,68,000 முறை செல்பி பயன்படுத்தப்பட்டுள்ளது.

எப்படி இருக்கிறார்கள்? எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று அவ்வப்போது மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தும் நோக்கில் விநாடிக்கு விநாடி செல்பி படங்களில் மின்னணு உலகச் சமுதாய வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. தான் எவ்வாறு மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்று விநாடிதோறும் கவலைப்படும் இளைஞர்களின் கனவுகளை செல்பி சுமக்கிறது. செல்பியைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்? வாசகர்கள் தந்துள்ள சொற்கள் வருமாறு:

  • ப. இரா. இராச அம்சன் - சுய உருவப்படம்/ தன்னோவியம்/ தன்பகிர்வுப்படம்/ தன்னுருவ வெளிப்பாடு/ சுய பகிர்வோவியம்/ சுயமோகப் பட வெளிப்பாடு
  • கோ. மன்றவாணன் - சுயபடம்/ தன்வயப்படம்/ தற்சார்புப் படம்/ தன்கவர்படம்/ தன்படிமம்/தானெடு தன்படம்/ தன்னைத் தான் படமெடுத்தல்/ சுயமி/ தன்மி/
  • வெ. ஆனந்தகிருஷ்ணன் - தானே புகைப்படம் எடுத்தல்
  • எழில்சோம. பொன்னுசாமி - தன்னலப் பற்றாளன்/ தன்னலமி/ தன்முகச் சிந்தனையாளர்
  • மு.தருமராசன் - தன்னொளிப்படம்
  • இராம. தேவநாயகம் - தன்னலத் தோன்றி/ தன்னலவாதி

ஜனநேசன் - தன் உருவத்தைத் தானே பதிவு செய்தல்/ தன்பிம்பத்தைத் தானே நிறுவுதல்/ தன்னைத் தானே படம் எடுத்துக்கொள்வதற்குக் கைப்பேசியே வசதியாக இருக்கிறது. பெரும்பாலான செல்பி கைபேசி வழியேதாம் எடுக்கப்படுகின்றன. நாம் நமது கையால் எழுதிக் கொடுப்பதைக் "கைப்பட எழுதிக் கொடுத்தேன்' என்று சொல்வது வழக்கில் இருக்கிறது. கைச்செலவு என்றால் சொந்தச் செலவு என்று பொருள். கை என்ற சொல்லுக்கு ஒப்பனை என்றும் பொருள் இருக்கிறது.

எனவே, கைப்பேசியால் எடுக்கப்படுகிற - தன் கையால் எடுக்கப்படுகிற தன் படத்தைக் கைப்படம் என்று சொல்லலாம். மற்றவர்களால் எடுக்கப்படுவது புகைப்படம் என்றால், தன் கையால் தானே எடுத்துக் கொள்வதைக் கைப்படம் என்று சொல்லலாம். கைக்குட்டை போன்று கைப்படமும் வழக்கில் வரும்.

Selfie - கைப்படம்

அடுத்த வாரத் தேடல் - Spam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com