

செயற்பட முடியாமல் இரண்டும் கெட்டான் நிலையில் இருப்பவர்கள், திரிசங்கு நிலையில் தாங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
திரிசங்கு, மன்னனாக இருந்தவன். இருக்கிற உடலோடு சுவர்க்கம் போக ஆசைப்பட்டான். குலகுரு வசிட்டரோ அதற்கு வாய்ப்பில்லை என்று மறுத்துவிட்டார். மன்னன், வசிட்டரை விட்டுவிட்டு அவருடைய புதல்வர்களிடம் போனான். அவர்களும் மறுத்தனர். ஆனாலும் மன்னன் விடவில்லை. இருக்கிற உடலோடு சுவர்க்கம் போக வசிட்டரின் புதல்வர்களைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தான். தொல்லை தாங்க முடியாமல் வசிட்டரின் புதல்வர்கள் சாபம் இட்டனர்.
ஏமாற்றத்தின் விளிம்பில் இருந்த திரிசங்கு மன்னன் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள, எதிர் முகாமுக்குச் சென்றான்; வசிட்டரின் எதிரியான விசுவாமித்திரர் உதவ முன்வந்தார். தன் தவவலிமையால் இருக்கிற உடலோடு திரிசங்குவைச் சுவர்க்கத்துக்கு அனுப்பிவைத்தார்.
""திரிசங்குவே திரும்பிப் போ'' என்று சுவர்க்கத்தில் இருப்பவர்கள் தள்ளிவிட்டனர். தலைகீழே பூமியை நோக்கிவிழுந்து கொண்டிருந்தான் திரிசங்கு.விசுவாமித்திரருக்குக் கோபம் வந்தது. வழியிலேயே ஒரு சுவர்க்கத்தை உருவாக்கினார். அது பூமியாகவும் இல்லை; சுவர்க்கமாகவும் இல்லை. பூமிக்கும் சுவர்க்கத்துக்கும் இடையில் இருக்கிறது திரிசங்கு சுவர்க்கம் என்று, இராமாயணத்தில் கதை இருக்கிறது.
வேலை செய்து கொண்டிருக்கும்போது சிறிது நேரம் ஏதாவது யோசித்துக் கொண்டிருந்தாலே கணினி தூங்கிப் போய்விடுகிறது. அதை எழுப்பி மறுபடியும் வேலைவாங்க வேண்டும். அதுவாவது பரவாயில்லை, சிலநேரம் திரிசங்கு சுவர்க்கத்திற்கே கணினி போய்விடுகிறது. திகைப்பூண்டை மிதித்தது போல பல நேரம் அப்படியே திகைத்து நின்றுவிடுகிறது. சமாதானம் செய்ய முடியவில்லை. எப்படியும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.
இரண்டும் கெட்டான் நிலைக்கு நம்மை ஆளாக்கும்; கோபச்சூடு குறைந்தால்தான் மறுபடியும் செயற்படத் தொடங்கும். கணினியை யாரும் தூக்கில் தொங்கவிடவில்லை. தானாகவே திரிசங்கு நிலையில் இரண்டும் கெட்டானாகத் தொங்குகிறது. அப்போது கணினி ஏஹய்ஞ் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். கணினிப் பயன்பாட்டில் ஏஹய்ஞ் என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்? வாசகர்களின் பரிந்துரைகள் வருமாறு:
Hang ஆகி இருக்கிறபோது கணினி தூங்குவதில்லை. ஆனால், செயற்படாத நிலைக்குப் போய்விடுகிறது. கீழே பிடிமானம் இல்லாமல் (கட்டுப்பாடு இல்லாமல்) மேலிருந்து தொங்குவதைத் "தொங்கல்' என்று சொல்கிறோம்.
""தொங்கல்வார் குழல்'' என்று சீவக சிந்தாமணியிலும் ""தொங்கற் பொருள்'' என்று திருக்கோவையார் உரையிலும், ""தொங்கலுங் குடையும்'' என்று கம்ப ராமாயணத்திலும் தொங்கல் எனும் சொல் இடம்பெற்றுள்ளது. ""ஆபரணத் தொங்கல்'' என்று திவாகர நிகண்டும் பொருள் சொல்கிறது.
நம்பிக்கை தந்தவர்கள் திடீரென்று உதவ மறுத்தால் ""தொங்கலில் விட்டுவிட்டார்கள்'' என்று சொல்கிற மக்கள் வழக்கும் இருக்கிறது.
எனவே, நம்பிக்கையோடு வேலை செய்துகொண்டிருக்கும் போது திடீரென்று செயற்படாமல் கணினியும் தொங்கலில் மாட்டிக் கொள்கிறது; நம்மையும் தொங்கலில் விட்டுவிடுகிறது. எனவே, கணினிப் பயன்பாட்டில் ஏஹய்ஞ் என்பதற்கு வாசகர்கள், மீனா. கண்ணன், செ.நாராயணசாமி, கோ.மன்றவாணன், ஜனநேசன் ஆகியோர் பரிந்துரைத்துள்ள "தொங்கல்' என்பதையே எடுத்துக்கொள்ளலாம்.
Hang - தொங்கல்
1-3-15 தேடலுக்கான சொல் - Hot spot
8-3-15 தேடலுக்கானசொல் - Return gifts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.