இப்பாடலின் முன் நான்கு அடிகளுக்கு "மிக்க இருள் நீங்க, பறவைகள் இரைச்சலிட, அழகுள்ள குவளை மலர்கள் வாட, கூட்டமான தாமரை அரும்புகள் இதழ்கள் விரிந்து மலர, செய்யப்படுகின்ற பெருந்தவ நிலைகள் எல்லாத் திக்குகளிலும் மிகுதியாக நடக்க' என்று சுட்டப்பெறும் பொருள் சூரியனுக்குப் பொருந்துகிறது.
இதே தொடர்களுக்குத் "தேன் கலந்த நீர் உள்ளே சிதற, மரங்களில் கனிந்த நல்ல பழங்கள் கீழ் உதிர்ந்து குவிந்து கிடப்ப, ஒன்றுபட்டு எரிகின்ற நெருப்புத்திரள் சுடர்விட்டெரிய, அதனால் உண்டாகும் வெப்பம், எல்லாப் பகுதிகளிலும் மிகுதியாகப் பெற' என்று சுட்டப்பெறும் பொருள் கொல்லிமலைக்குப் பொருந்துகிறது.
அடுத்தடுத்துள்ள தொடர்களுக்கான பொருள் வருமாறு: "மாறுபாடு அற்ற வெய்யவன்போல் வளர்ச்சியுறுகின்ற கொல்லிமலைக்குத் தலைவனான, சிறப்புமிக்க புகழுடைய வேலப்பனென்னும் தலைவன் முன் பற்றிய காதல் தன் செயலறாமல் இன்னும் என்னை அதன் பக்கங்களிலேயே சுழற்றி அடிக்கின்றது. தென்றல் காற்று மகரந்தப் பொடிகளைத் தூவும். அன்றிற் பறவை மறந்துங்கூடத் தூங்காமல் வருத்தும். முத்துமாலைகள் நீறாகப் பொடிந்து விழுதல் எதனாலேயோ! ஒரு நொடி எனக்கு மூன்று நாள்கள் போல் நீண்டு வருகிறது. என் தாய் நாள்தோறும் என்மீது குறை கூறுகிறார். நீயும்(நிலவே) என் உடலை கொதிக்கும்படி கதிர்களை
வீசுகின்றாயே!'
இந்நூல் பல காலம் உரையின்றி இருக்க, செ.ரெ. இராமசாமிபிள்ளை 1952-இல் உரையெழுதியுள்ளார். பார்வையற்ற மாம்பழக் கவிச்சிங்க நாவலர், நிலவை விளித்து "சந்திர விலாசம்' பாடியிருப்பது வியப்புக்குரியதாகும்! இப்புலவர் தமது 48ஆவது வயதில் (1884) மறைந்துவிட்டார் எனினும், 1908-இல் இவருடைய படைப்புகள் அனைத்தும் "மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பிரபந்தத் திரட்டு' என்ற பெயரில் அச்சிடப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.