
இந்த உடலின் ஒவ்வோர் உறுப்புகளுக்கும் ஊறு நேராதவாறு இறைவன் காக்க வேண்டும் என்ற கருத்தில் கந்தர் சஷ்டி கவசம், சண்முகக் கவசம் போன்றவற்றை இறையன்பர்கள் தினந்தோறும் பாராயணம் செய்து வருவதைக் காண்கிறோம்.
இதைப் போன்று மகாகவி பாரதியார் தமது வழிபடு தெய்வமான "பராசக்தி' மீது கவசம் ஒன்றை எழுதியுள்ளார். பாரதி கவிதை நூலில் தோத்திரப் பாடல் தொகுப்பில் காணப்படும், "சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்' என்ற நீண்ட பாடலே அது.
அப்பாடலில் தமது கை, கண், காது, கால், நாசி, நாக்கு, வாய், வயிறு, மார்பு, தொண்டை, இடை, காயம், அறிவு, சிந்தனை, மனம், மதி ஆகியவற்றை பராசக்திக்குச் சமர்ப்பணம் செய்து நல்லருள் வேண்டுகிறார்.
"கையைச் சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தியுற்றுக் கல்லினையும் சாடும் (1)
நெஞ்சம் சக்தி தனக்கே கருவியாக்கு - அதைத்
தாக்க வரும் வாள் ஒதுங்கிப் போகும் (9)
சித்தம் சக்தி தனக்கே உரிமை ஆக்கு - அதில்
சார்வதில்லை அச்சமுடன் சூதும் (26)
மதி சக்தி தனக்கே உடைமை ஆக்கு - அது
சஞ்சலப் பிசாசுகளைக் கலக்கும்' (32)
என்பன போன்ற வீராவேச வரிகள் அப்பாடலில் இடம்பெறுகின்றன.
"அச்சம் தவிர்; ஆண்மை தவறேல்; இளைத்தல் இகழ்ச்சி; உடலினை உறுதி செய்; ஏறு போல் நட; குன்றென நிமிர்ந்து நில்' என்று புதிய ஆத்திசூடியில் புகன்ற மகாகவி பாரதி பாரத மாதாவையே பராசக்தி வடிவில் போற்றி, பாரத நாட்டு மக்கள் புதிய வீர எழுச்சி பெற அக்கவசத்தை இயற்றியுள்ளார் எனவும் கருதலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.