கொழித்துக் கொளப்பட்ட நண்பி னவரைப்
பழித்துப் பலர் நடுவண் சொல்லாடார் } என்கொல்?
விழித்தலரும் நெய்தல் துறைவ! உரையார்
இழித்தக்க காணின் கனா. (பா}182)
கண்கள் விழித்திருப்பனபோன்று மலர்கின்ற நெய்தற் பூக்களையுடைய கடல் துறைக்கு உரியவனே! ஆராய்ந்து தெளிந்து கொள்ளப்பட்ட நண்பர்களைப் பழித்து, அறிவுடையோர் பலர் நடுவிலே சொல்லாட மாட்டார்கள்; காரணம், தமக்கு இழிவைத் தருவன பற்றிக் கனவு கண்டவர், அதனை யாருக்கும் சொல்ல மாட்டார்கள் என்பதால். நண்பரை பழிகூறித் தூற்றினால் அந்த இழிவு நம்மையும் வந்தடையும் என்பது கருத்து. "இழித்தக்க காணின் கனா' என்பது பழமொழி.