ஈட்டிய ஒண்பொருள் இன்றெனினும் ஒப்புரவு
ஆற்றும் மனைப்பிறந்த சான்றவன் - ஆற்றவும்
போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும்
ஏற்றுக்கன்று ஏறாய் விடும். (பாடல்-217)
நல்ல எருதுக்குப் பிறந்த ஒரு கன்றானது, வளர்ப்போனால் மிகுதியும் பேணப்படாததாகித் தின்னும் புல்லும் சரிவரக் கிடைக்கப் பெறாமல் எதை எதையோ மேய்ந்து கொண்டிருந்தாலும், பின்னர் உறுதியாக நல்லதொரு எருதாகிவிடும். அதுபோலவே, நல்ல குடியிலே பிறந்த சான்றாண்மை உடையவன் தான் தேடித் தொகுத்த சிறந்த பொருள்கள் யாதும் தன்னிடத்தே இல்லை என்றாலும், தன் குடிப்பண்பின் காரணமாக உபகாரம் செய்பவனாகவே இருப்பான். "ஏற்றுக்கன்று ஏறாய் விடும்' என்பது பழமொழி.