தாரேற்ற நீண்மார்பின் தம்மிறைவன் நோக்கியக்கால்
போரேற்றும் என்பார் பொதுவாக்கல் வேண்டுமோ?
யார்மேற்றாக் கொள்ளினும் கொண்டீக் காணுங்கால்
ஊர்மேற்றதாம் அமணர்க்கு ஓடு. (பாடல்-231)
காட்டிலிருந்து தவம் செய்யும் அமணர்க்கும், ஓட்டால் வரும் பயன் எல்லாம் பலர் உறையும் ஊரினிடத்ததாகவே விளங்கும். அரசன் குறித்து நோக்கியபோதே, போரை ஏற்றுச் செல்வோம்' எனத் தறுகண்மை பேசுபவர்கள், "அவன் பொதுவாகவே நோக்கினான்; நம்மைக் குறிப்பிட்டு நோக்கவில்லையே' என்று நினைக்காமல், யாரை அவன் பார்த்தாலும், அதனைத் தம்மேலேயாக நோக்கினான் என்று கருதி, அச்செயலை முடிப்பதே சிறப்பு. "ஊர் மேற்றதாம் அமணர்க்கு ஓடு' என்பது பழமொழி.