மகாகவி பாரதியார் இயற்றிய பாஞ்சாலி சபதத்தில் திருதராஷ்டிரர் ஒரு சிறப்புமிக்க மண்டபத்தைக் கட்டியெழுப்ப தொழிற் கலைஞர்க்கு ஆணையிடுகின்றார். அதற்கேற்ப கல்லையும் மண்ணையும் பொன்னையும் சேர்த்து அழகிய நவரத்தினங்களை ஆங்காங்கே பதித்து தொழிற் கலைஞர்கள் அந்த மண்டபத்தைக் கட்டி முடித்தனர். இதனை பாரதியார்,
"கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு
காமர் மணிகள் சிலசில சேர்த்துச்
சொல்லை இழைத்துப் பிறர்செயு மாறே
சுந்தர மாம்ஒரு காப்பியம் செய்தார்'
என்று பாடுகின்றார். சொற்களைக் கொண்டு புலவர்கள் இயற்றிய அழகிய காவியம் போல அந்த மண்டபத்தை நல்ல தொழில் உணர்ந்தார்கள் கட்டி முடித்தார்கள் என்று அதற்கு உவமை கூறுகின்றார்.
இந்த இடத்தில் பாரதியார் எந்தக் காவியத்தை மனத்தில் நினைத்துக் கொண்டு பாடினார் என்றால், அது "சுந்தர காண்டம்' என்பதை சிறப்பாகப் பாடிய கம்பராமயணக் காவியமே ஆகும். ஏனென்றால், பாரதியின் மனம் கவர்ந்த காவியம் கம்பராமாயணம்தானே!