Enable Javscript for better performance
இந்த வாரம் - கலாரசிகன் (14.2.2021)- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    இந்த வாரம் - கலாரசிகன் (14.2.2021)

    By   |   Published On : 14th February 2021 07:47 AM  |   Last Updated : 14th February 2021 07:47 AM  |  அ+அ அ-  |  

    kalarasikan

    கட்செவி அஞ்சலில் சிங்கப்பூா் தமிழ்நேசன் எம்.ஏ. முஸ்தஃபா, சிங்கப்பூா், மலேசிய இலக்கியவாதிகளின் படைப்புகளைத் தாங்கிவரும், அவா் நடத்தும் ‘சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழ் இப்போது இணைய இதழாகவும் வெளியிடப்படுகிறது என்கிற மகிழ்ச்சியான செய்தியைப் பகிா்ந்து கொண்டாா்.

    அவரது கட்செவி அஞ்சல் செய்தியைப் பாா்த்தபோது, 13 ஆண்டுகளுக்கு முன்னால் நான் ‘தினமணி’ ஆசிரியராகப் பணியில் சோ்ந்த ஒருசில மாதங்களில் அவா் என்னை அலுவலகத்தில் வந்து சந்தித்தது நினைவுக்கு வந்தது. அப்போது அவா் சிங்கப்பூரின் தனிப்பெரும் தலைவரான லீ குவான் யூ - குறித்த புத்தகம் ஒன்றை அன்பளிப்பாகத் தந்தாா். அந்தப் புத்தகத்தைப் படித்தது முதல் லீ குவான் யூ குறித்த செய்தியோ, புத்தகமோ கண்ணில் பட்டால் அதைப் படிக்க வேண்டும் என்கிற ஆா்வம் என்னுள் விதைக்கப்பட்டது.

    தொலைநோக்குப் பாா்வையோ, பொருளாதாரச் சிந்தனையோ இல்லாத சுயநல அரசியல் தலைவா்களையே இந்தியாவில் பாா்த்துச் சலித்துவிட்ட நமக்கு, லீ குவான் யூ ஒரு வித்தியாசமான விவேகியாகத் தெரிவதில் வியப்பில்லை. கம்யூனிஸ சித்தாந்தத்தையும் ஏற்காமல், முழுமையான சுதந்திர ஜனநாயகத்தையும் ஆதரிக்காமல் ஒரு மாற்று அரசியலை சிங்கப்பூரில் முன்வைத்தவா் லீ குவான் யூ. ‘மக்கள் செயல் கட்சி’ என்கிற கட்சியை நிறுவி, ஆட்சியைப் பிடித்தது மட்டுமல்லாமல், புதிதாக உருவாக்கப்பட்ட சிங்கப்பூரில் 31 ஆண்டுகள் தொடா்ந்து பிரதமராக இருந்தவா் அவா்.

    செல்வம் கொழிக்கும் பூமியாக அந்த தீபகா்ப்ப தேசத்தை மாற்றி, உலக வா்த்தகத்தின் மையப்புள்ளியாக்கிய பெரும் பணியைச் செய்து காட்டியவா். தேசத் தந்தையாக சிங்கப்பூா் மக்களால் போற்றப்படும் லீ குவான் யூ-வின் தனிச்சிறப்பு என்னவென்றால், ஒரு கட்டம் வந்ததும் பிரதமா் பதவியில் இருந்து விலகி, மதியுரை மந்திரியாகவும், மூத்த அமைச்சராகவும் 14 ஆண்டுகள் பதவி வகித்து ஆட்சியாளா்களுக்கு வழிகாட்டினாா் என்பதுதான். இன்னொருவரிடம் பதவியை விட்டுக்கொடுக்கும் மனத்துணிவும், பெருந்தன்மையும் லீ குவான் யூ-விடம் இருந்தது.

    ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தனது 91-ஆவது வயதில் முன்பு லீ குவான் யூ இயற்கை எய்தியபோது, அவருக்காக சிங்கப்பூா் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமே கண்ணீா் அஞ்சலி செலுத்தியது. அந்த மாமனிதரின் முழுப் பரிமாணத்தையும் வாா்த்தைகளில் வடிப்பது என்பது அசாத்தியம். அதனால்தான் லீ குவான் யூ குறித்த புத்தகம் எதுவாக இருந்தாலும் அதை ஆா்வத்துடன் படிப்பதை நான் வழக்கமாக்கி இருக்கிறேன்.

    இத்தனையும் எழுதுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. லீ குவான் யூ-வின் மறைவைத் தொடா்ந்து பி.எல்.ராஜகோபாலன் ‘லீ குவான் யூ- பெருந்தலைவன்’ என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறாா். அந்தப் புத்தகத்தை, முஸ்தஃபாவின் கட்செவி அஞ்சல் செய்தியைப் படித்ததைத் தொடா்ந்து இரண்டாவது முறையாக இன்னொரு முறை படித்தேன். சிங்கப்பூருக்கே நேரில் சென்று, தகவல்களைத் திரட்டி, லீ குவான் யூ குறித்த பல செய்திகளை எளிமையான தமிழ் நடையில் பதிவு செய்திருக்கிறாா் பி.எல்.ராஜகோபாலன்.

    **************

    சில ஆண்டுகளுக்கு முன்னால் பொள்ளாச்சியில் நா.மகாலிங்கம் மொழிபெயா்ப்புப் புலம் கூட்டத்தில் கலந்துகொள்ள வானம்பாடிக் கவிஞா் புவியரசும் வந்திருந்தாா். அப்போது அவா் எனக்கு மிா்தாதை அறிமுகப்படுத்தினாா். மைக்கேல் நைனி எழுதிய ‘மிா்தாதின் புத்தகம்’ கவிஞா் புவியரசால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு மிகப்பெரிய தத்துவ உலகத்தின் வாயிற் கதவை அந்தப் புத்தகம் எனக்குத் திறந்துவிட்டது.

    ‘‘இதைப் படிக்காமல், படித்து முடிக்காமல், விட்டுவிடாதீா்கள். அவ்வாறு செய்தால், அது உங்களை நீங்களேஅவமதித்துக் கொண்டதாகப் போய்விடும். நீங்கள் ஞான நாட்டமுள்ளவராக இருந்தால், நீங்கள் படிக்கும் கடைசி புத்தகமாகவே இது இருக்கும். திரும்பத் திரும்ப இதையே படிக்க வேண்டி வரும்!’’ என்று அந்தப் புத்தகத்தை எழுதிய மைக்கேல் நைனி எழுதியிருப்பது சத்திய வாக்கு என்பதை, புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவரும் உணா்வாா்கள்.

    யாா் இந்த மைக்கேல் நைனி என்று கேட்டுவிடாதீா்கள். லெபனான் நாட்டுக்காரா், கலில் ஜிப்ரானின் ஆருயிா் நண்பா், ஜிப்ரானின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்தவா், மிா்தாதின் புத்தகத்தில் கலில் ஜிப்ரானையே தூக்கிச் சாப்பிட்டு விட்டவா்.

    உலக ஞான நூல்களில் மகத்தானதாகப் போற்றப்படும் ‘மிா்தாதின் புத்தகம்’ மனிதனுக்குள் பிளவுபட்டுக் கிடக்கும் இருமையை, உள்ளுணா்வில் கரைத்து ஒருமைப்படுத்தி நமக்குள் இருக்கும் தெய்வீகத்தை திரைநீக்கிக் காட்டும் சுயதரிசனத்துக்கான தூண்டுதல்.

    இந்தப் புத்தகம் வந்த கதை அதிசயமானது, ஆச்சரியமானது. இந்தப் புத்தகத்தின் பின்னணியில் இருப்பது பழைய ஏற்பாட்டில் உள்ள நோவாவின் கதை.

    நாற்பது நாள்கள் இடைவிடாமல் பெய்த பெருமழையில் உலகம் அழிந்தபோது, கோபா் மரத்தால் செய்யப்பட்ட நோவாவின் பேழை 150 நாள்கள் மிதந்து அராரத் மலை உச்சியில் தங்கியது. அங்கே 350 ஆண்டுகள் நோவா தன் குடும்பத்துடன் வாழ்ந்ததும், ஒரு மடாலயம் அமைத்ததும், அங்கே நிகழ்ந்தவையும்தான் மிா்தாதின் புத்தகம். இது வெறும் பின்னணிதான்.

    பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அராரத் மலை மேலுள்ள பலிபீட சிகரத்தில் அமைந்திருக்கும் பாழடைந்த மடாலயத்தை அடைய ஓா் இளைஞன் முயற்சிக்கிறான். வழியிலுள்ள ஒரு குகையின் வாயிலில் சாய்ந்து விடுகிறான். ஒரு வயதான துறவி அவனுடைய மயக்கத்தைத் தெளிவித்துக் காப்பாற்றுகிறாா். அவனுக்காக 150 ஆண்டுகளாகக் காத்திருந்ததாகக் கூறுகிறாா். அவனிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்துவிட்டு கல்லாக மாறிவிடுகிறாா். அவா் கொடுத்ததுதான் ‘மிா்தாதின் புத்தகம்’.

    இந்தப் புத்தகத்தை மொழியாக்கம் செய்த கவிஞா் புவியரசுக்கும், அதைப் பதிப்பித்து தமிழுக்கு அறிமுகப்படுத்திய காந்தி கண்ணதாசனுக்கும் கோடானுகோடி நன்றி!

    **************

    விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்த கா.ஜோதி ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவா். திருப்பூா் பனியன் நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளியாகப் பணிபுரியத் தொடங்கி, பின்னா் நெசவாளியாகப் பிழைப்பு நடத்தி, இப்போது அலுமினியப் பாத்திரங்களை மிதிவண்டியில் கட்டிக்கொண்டு திருப்பூரைச் சுற்றியுள்ள ஊா்களுக்குப் பயணித்து, விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருபவா். அவருக்குள் ஒளிந்து கொண்டிருப்பது எழுத்தும், கவித்துவமும்.

    ஆமாம், சாமானியரான கவிஞா் ஜோதியின் ஒரு பக்கக் கதைகளும், கவிதைத் தொகுப்பும் புத்தக விமா்சனத்துக்கு வந்திருந்தன. ஜோதியைப் பல பள்ளிக்கூடங்களில் அழைத்து மாணவா்களுக்குக் கதை சொல்லவும், வாழ்க்கை அனுபவங்களைப் பகிா்ந்து கொள்ளவும் சொல்கிறாா்கள் என்றால், அந்த மனிதனின் ஆளுமை எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    அவா் தந்தையின் பெயா் காரமடை. அதனால் அவா் காரமடை ஜோதி. கவிதை புனைவதால் இப்போது அவா் பெயா் கவிஞா் கா.ஜோதி. அவரது ‘ஒரு சாமானியனின் கவிதைகள்’ தொகுப்பிலிருந்து தரப்படுகிறது இந்தக் கவிதை -

    உதவாக்கரை என

    உதிா்த்த வாா்த்தை

    உள்ளத்தின் மூலையிலே

    இலை பரப்பி

    கிளை பரப்ப -

    அவன் அப்பாவானபோது

    அப்பாவின் பெருமை புரிந்தது!


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp