

பரலி சு.நெல்லையப்பரின் கீழ்க்காணும் இரு பாடல்கள் அவரது கவிதை ஆற்றலுக்குக் கட்டியம் கூறுகின்றன. "செந்தமிழ் இலக்கியக் கலம்பகம்' (1941) என்ற நூலில் இப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. முத்திடமும், நாவற்பழத்திடமும் கேள்வி கேட்டு, அதற்கு அவை விடை கூறியதாக அமைந்த பாடல்கள் இவை:
"கடலிடைப் பிறந்த முத்தே!
கருதி நான் ஒன்று கேட்பேன்;
திடனொடுன் எழிலுஞ் சீரும்
எங்குநீ பெற்றாய்?' என்றேன்;
"வடிவுறு தமிழ மாதர்
முறுவலை மனத்தில் உன்னி
வழகினைப் பெற்றேன் அன்றே!' (பா.3)
"காரெனக் கறுத்து நீலம்
கலந்தொளிர் கனியே! உன்றன்
சீரிய கருமை எங்கே பெற்றனை?
செப்பாய்' என்றேன்;
"வீரியம் அழகொ டாண்மை
மேன்மைசேர் தமிழ்நன் னாட்டு
நாரியர் விழியி னின்றிந்
நலத்தினைப் பெற்றேன் அன்றே! (4)
"கடலிடைப் பிறந்த முத்தே உனக்குக் கிடைத்திருக்கும் சீரிய அழகை எங்கிருந்து பெற்றாய்' என வினவ, "தமிழ் நாட்டு மாதர்தம் நிகரிலாச் சிரிப்பை மனத்திலே நினைத்துக் கடலுக்குள் இருந்து தவம் செய்து இவ்வழகினைப் பெற்றதாக அது விடை கூறியதாம்.
இரண்டாவது பாடலில், "நீலம் கலந்த கருமை நிறத்தில் ஒளிர்கின்ற அழகிய நாவற்பழமே! இவ்வழகிய கருமையை எங்கிருந்து பெற்றாய்' என்றதற்கு, "எதையும் செய்து முடிக்கும் ஆற்றல், அழகு, அழகிய கருமைநிறம் இவற்றை தமிழ்நாட்டுப் பெண்களின் விழிகளின் அழகிலிருந்து அன்றே பெற்றுவிட்டேன்' எனப் பதில் கூறிற்றாம் நாவற்பழம்.
நாவல் பழங்கள் உயரமான மரத்தில் விளைந்து பலன் தருகின்றன. முத்து ஆழமான கடலிடைப் பிறந்து மனிதனை மகிழ்விக்கின்றன. பரலி சு. நெல்லையப்பரின் பாடல்களும் நம்மை மகிழ்விக்கிறதே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.