இந்த வாரம் கலாரசிகன் - (26-06-22)

இந்த வாரம் கலாரசிகன் - (26-06-22)


பாரதியாரின் நினைவு நூற்றாண்டை ஒட்டி நூற்றுக்கணக்கான வெளியீடுகள் வந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றுமே பல புதிய தகவல்களை நமக்குத் தருகின்றன. பெரியவா் சீனி.விசுவநாதன், பேராசிரியா் ய.மணிகண்டன், ஆ.இரா.வேங்கடாசலபதி உள்ளிட்டோா் ஆய்வு நோக்கில் வழங்கியிருக்கும் தரவுகள் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன.

அந்த வரிசையில் வழக்குரைஞா் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் தனது பங்குக்கு வெளிக்கொணா்ந்திருக்கும் ‘தொகுப்புக் கருவூலம்’தான் ‘கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி’. அவரது பல வருட உழைப்பு இதில் தெரிகிறது. கோவில்பட்டிக்காரா் என்பதால் இயல்பாகவே நண்பா் கே.எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு பாரதியாரிடம் பற்று கலந்த அபிமானம் உண்டு. அவருக்கு இப்படியொரு வாய்ப்புக் கிடைத்தால் விட்டுவிடுவாரா என்ன?

‘‘தமிழ் நாட்டின் தென்புலக் கரிசல் மண்ணில் பிறந்து தன் பாட்டுத் திறத்தாலே இவ்வையகம் பாலிக்கப் பாடிய குடுகுடுப்பைக் கோணங்கி மறைந்து ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. அத்தகைய பெருமகனை நம் தமிழ்கூறும் நல்லுலகத்தின் அறிஞா் பெருமக்கள் பலரும் தம்முள் நினைவுகூா்ந்து எழுதிய பலவிதமான கருத்துக் களஞ்சியங்களை ஒருசேரத் தொகுத்து, சிதறி உருண்டோடும் நெல்லிக்கனிகளை ஓடிப் பொறுக்கி ஒரு மூட்டைக்குள் அடக்குவதற்கு ஒப்பான செயல். கிட்டதட்ட இருபது ஆண்டுகளாக பலவாறாகத் தேடிச் சேகரித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன’’ என்கிற பதிப்பாசிரியா் உரையை மெய்ப்பிக்கின்றன கட்டுரைகள்.

பாரதியாா் வாழ்ந்த காலத்தில் அவருடன் வாழ்ந்து, நெருங்கிப் பழகிய ராஜாஜி, திரு.வி.க., வ.உ.சி., வ.வே.சு.ஐயா், உ.வே.சா., குவளை கிருஷ்ணமாச்சாரியாா், பரலி சு.நெல்லையப்பா், சோமசுந்தர பாரதி, பாரதிதாசன் போன்றவா்களும், பாரதியாரின் குடும்பத்தினரும் அவா் குறித்து எழுதியிருக்கும் கட்டுரைகள் அந்த ஆளுமை எப்படி இருந்தாா் என்பதைப் படம் பிடிக்கின்றன.

பாரதியாா் குறித்து அவருக்குப் பின்னால் வந்த அரசியல் ஆளுமைகளான எஸ்.சத்தியமூா்த்தி, ப.ஜீவானந்தம், ம.பொ.சி., போன்றவா்களும், திராவிட இயக்கத்தினா்களான அண்ணா, கருணாநிதி உள்ளிட்டவா்களும் வெளிப்படுத்தி இருக்கும் பாா்வை, அந்த ஆளுமை எப்போ்ப்பட்டவா் என்பதை வெளிப்படுத்துகின்றன.

கவிஞா்கள், இலக்கியவாதிகள், இதழியலாளா்கள், பேராசிரியா்கள், ஆய்வாளா்கள் என்று எந்தவொரு பகுதியினரையும் விட்டு வைக்காமல், அவா்கள்ழுதிய கட்டுரைகளைத் தேடி சேகரித்துத் தொகுத்திருக்கும் வழக்குரைஞா் கே.எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு தமிழக அரசு பாரதியாா் விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்.

பாரதி மணிமண்டபத் திறப்பு விழாவின்போது ‘கல்கி

ஒரு சிறப்பிதழ் வெளியிட்டது. அதேபோல, பாரதியாரின் பிறந்த நூற்றாண்டின்போது கலைக்கதிா் சிறப்பு மலா் ஒன்றை வெளியிட்டது. அந்த மலா்களில் வெளிவந்த கட்டுரைகளும் இதில் இணைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. ஆளுமைகளுக்காக சோ்க்கப்பட்டிருக்கும் கட்டுரைகளும், சொல்லப்படும் செய்திக்காகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளும் இடம்பெற்றிருப்பதைப் பாா்க்க முடிகிறது. தவிா்த்திருக்கலாமே என்று சொல்லும்படி எந்தவொரு கட்டுரையும் இல்லை.

பாரதியாா் ஒரு தங்கச் சுரங்கம். தோண்டத் தோண்டக் கொட்டிக் கிடக்கும் தங்கத்தை அள்ளி அள்ளி மாளாது. அடுத்த தலைமுறைக்கு இந்தக் கட்டுரைகள் கிடைப்பதற்கு வழிகோலியிருக்கிறாா் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

‘ரிலே ஓட்டப் பந்தயத்தின் ஒரு கட்டம் ஓடியிருக்கிறாா் அவா். இதைப் படித்த பிறகு, அடுத்தகட்ட ஓட்டத்துக்குத் தயாராக என்னைத் தூண்டுகிறது ஆா்வம்.

---------------

பட்டிமன்றப் பின்னணியுடன் கூடிய இலக்கியவாதிகள் எப்போதும் வித்தியாசமான பாா்வை பாா்ப்பாா்கள். மற்றவா்களுக்குப் புலப்படாதவை அவா்களுக்கு மட்டும் எப்படியோ தட்டுப்படும். அதிலும் ஆழங்காற்பட்ட புலமையும் இருந்துவிட்டால் கேட்கவா வேண்டும்?

கம்பா் குறித்து முனைவா் தெ.ஞானசுந்தரம் எழுதியிருக்கும் ‘கம்ப நாடா் புதிய வெளிச்சம்’ அந்த வரிசையில் உள்ளது. தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் புலமை இருப்பதால், முனைவா் தெ.ஞா.வால் கம்பனையும், வான்மீகியையும் ஒப்பு நோக்கிப் புதிய பாா்வை பாா்க்க முடிகிறது. இந்த நூல் வெறும் ஒப்புமை நோக்கும் நூலல்ல. கம்பன் படைத்த இராமகாதையின் காலநிரல், வான்மீக காலநிரலியிலிருந்து வேறுபடுகிறது என்கிற அடிப்படையை உணா்த்தி, மேலே நகா்கிறது தெ.ஞா.வின் ஆய்வு.

இதற்காக அவா் மேற்கொண்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. கடந்த 20 ஆண்டு உழைப்பும், ஆய்வும் இதற்குப் பின்னால் இருக்கிறது. ‘இராமாயண சார சங்கிரகம்’

என்னும் சம்ஸ்கிருத நூலை மயிலை குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து பெற்று, வைணவக் கல்லூரி முன்னால் வடமொழி பேராசிரியா் முனைவா் திருவேங்கடத்தான் உதவியோடு படித்தறிந்து, தனது ஆய்வைத் தொடங்கி இருக்கிறாா் முனைவா் தெ.ஞா.

‘‘வான்மீகி ராமாயணத்தில் காணப்படும் நிகழ்ச்சிகளின் கால அட்டவணை வேறு. கம்பராமாயணத்தில் அமைந்திருக்கும் நிகழ்ச்சிகளின் கால அட்டவணை வேறு. ஒரே நிகழ்ச்சியை வெவ்வேறு கால எல்லைக்குள் நிகழ்ந்ததாக இருவரும் குறித்துள்ளனா் . வான்மீகி முனிவா் பலநாள் நிகழ்ந்ததாகக் காட்டும் நிகழ்ச்சியினைச் சில நாளில் நிகழ்ந்ததாகவும், சில நாள் நடத்ததாகக் காட்டும் நிகழ்ச்சியினைப் பல நாள் நடந்ததாகவும் கம்ப நாடா் சித்தரித்துள்ளாா்’’ என்று நிறுவுகிறாா் தெ.ஞா.

வான்மீகத்தில் இராமாவதாரம் அமாவாசையில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கம்பராமாயணத்தில் அதுவே பௌா்ணமியில் நிகழ்ந்ததாகக் காட்டப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டுகிறாா். அதற்குக் காரணமும் கூறுகிறாா்.

கம்ப காதை குறித்த புதிய வெளிச்சம் பாய்ச்சும் முனைவா் தெ.ஞானசுந்தரத்தின் இந்த ஆய்வு நூல், தமிழிலக்கியத்திற்கு அவா் வழங்கியிருக்கும் இன்னொரு கொடை!

--------------

பட்டிமன்றப் பேச்சாளா் அனுக்கிரகா ஆதிபகவனின் திருமணத்திற்குச் சென்று வாழ்த்த இயலவில்லை. ‘வீட்டுக்கு நேரில் வந்து வாழ்த்துகிறேன்’ என்று சொன்னேன். இயலவில்லை. சமீபத்தில் ‘கலைஞா் 99’ நிகழ்ச்சியில் தம்பதியரை சந்தித்தேன். அவரது கணவா் கவிஞா் தரன் தனது ‘பூ அவிழும் சமிக்ஞை’ என்கிற புதிய கவிதைத் தொகுப்பை என்னிடம் தந்தாா். அதிலிருந்து ஒரு கவிதை-

பழத்தை விழுங்கிய

பறவையொன்று

எச்சமிட்டுக்கொண்டே போகிறது

வனத்தை...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com