நிலைஇய பண்பிலார் நேரல்லர் என்றொன்று
உளைய உரையார் உறுதியே கொள்க
வளையொலி ஐம்பாலாய் வாங்கி இருந்து
தொளையெண்ணார் அப்பந்தின் பார். (பாடல்-253)
சுருண்டு தழைத்ததும், ஐம்பகுதியாக முடிப்பதுமான கூந்தலை உடையவளே! அப்பம் தின்பவர்கள் அதனைத் தம் கையிலே வாங்கி, அதிலுள்ள துளைகள் எவ்வளவு என்று எண்ணிக் கொண்டிருக்க மாட்டார்கள். அதுபோல, "உறுதியாக நிலைபெற்ற பண்பில்லாதவர்கள் எல்லாம் நேர்மை உடையவர் அல்லர்' என்று, அவர்கள் மனம் புண்படும்படியாக ஒரு சொல்லைச் சொல்லாது, அவரிடமும் பெற்றுக்கொள்ளக் கூடிய உறுதியான பயன்களை மட்டுமே பெற்றுக்கொண்டு இன்புற வேண்டும். "தொளையெண்ணார் அப்பந்தின் பார்' என்பது பழமொழி.