
மகாகவி பாரதியார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து, அவருடன் மிக நெருக்கமாகப் பழகி, அவர் குறித்துப் பதிவு செய்திருப்பவர்கள் ஆறே ஆறு பேர்தான். அவர்களில் பாரதியாரின் மனைவி செல்லம்மா பாரதியும், சகோதரர் விஸ்வநாதய்யரும் உறவினர்கள்.
'பாரதி நினைவுகள்' எழுதிய யதுகிரி அம்மாளை, பாரதியார் தனது மூன்றாவது மகளாகவே கருதினார் என்று சொல்ல வேண்டும். பாரதியாருக்காக 'இந்தியா' இதழைத் தொடங்கி நடத்திய மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியாரின் மகள் அவர். பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த பத்து ஆண்டுகள் அவருடைய பாசத்துக்கு உரியவராக இருந்தவர் யதுகிரி அம்மாள்.
தான் பாரதியாரின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர் என்று பெருமிதத்துடன் கூறிக் கொண்டவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். பாரதியார் மீது மானசீக பக்தியே கொண்டிருந்தார் அவர் என்று சொல்ல வேண்டும்.
தன்னை பாரதியின் தாசன் என்று பாவேந்தர் அறிவித்தார் என்றால், பாரதிக்கு தாசனு தாசனாகவே வாழ்ந்தவர் வ.ராமசாமி ஐயங்கார் என்கிற வ.ரா. அவரது பாரதியார் சரித்திரமும், செல்லம்மாள் பாரதியின் 'தவப்புதல்வர் பாரதியார்' என்கிற புத்தகமும், யதுகிரி அம்மாளின் 'பாரதியார் நினைவுகளும்' பாரதியாரைக் குறித்த அடிப்படை ஆவணப் பதிவுகள்.
சிறு வயதில் பள்ளிப் பருவத்தில் இருந்து கடைசிவரை அவருடன் நெருக்கமாக நட்புப் பாராட்டியவர் ஒருவர் உண்டென்றால் அது நாவலர் சோமசுந்தர பாரதியாராகத்தான் இருக்கும். அவரது 'நான் கண்ட சுப்ரமணிய பாரதி' என்கிற பதிவில், மற்றவர்களின் புத்தகங்களில் காணக்கிடைக்காத பல அரிய நிகழ்வுகளும், பாரதியாரின் குணாதிசயங்களும் இடம் பெறுகின்றன.
'சுப்பு பாரதி', 'சோமு பாரதி' என்று அறியப்பட்ட அந்த இருவரின் தந்தையரும் எட்டயபுரம் சமஸ்தானத்தில் பணியாற்றிய நண்பர்கள். சுப்ரமணியன், சோமசுந்தரம் இருவருக்குமே ஒரே நாளில்தான் 'பாரதி' என்கிற பட்டம் எட்டயபுரம் சமஸ்தானத்தால் வழங்கப்பட்டது. சுப்பு பாரதி மகா கவிஞராக உயர்ந்தார் என்றால், சோமு பாரதி பிரபல வழக்குரைஞராகவும், இலக்கிய, இலக்கணங்களில் தேர்ந்த தமிழறிஞராகவும் இருந்தார்.
நாவலர் சோமசுந்தர பாரதியாருக்குத் தமிழக வரலாற்றில் சிறப்பான இடம் உண்டு. 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சிதம்பரம் பிள்ளை தொடங்கிய 'இண்டியன் நேவிகேஷன் கம்பெனி' என்கிற சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் செயலாளராக இருந்தார் நாவலர் சோமசுந்தர பாரதியார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
1937-ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கியவர் நாவலர் சோமசுந்தர பாரதிதான். அதற்காக அவர் நடைப்பயணம் மேற்கொண்டார் என்பதும், 1937 செப்டம்பர் 5-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைமைப் பொறுப்பேற்றவர் அவர் என்பதும் மற(றை)க்கப்பட்டிருக்கிறது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செயலராக அவர் இருந்தார் என்பதும் நினைவுகூரப் படுவதில்லை.
எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாரின் இல்லத்துக்குப் பின்னால் பழைமை மாறாமல் இப்போதும் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது நாவலர் சோமசுந்தர பாரதியார் குடும்பத்தின் 'தமிழ் அகம்' என்று பெயரிடப்பட்ட பங்களா வீடு. குடும்பத்தினரிடமிருந்து அந்த வீடு கைமாறி, திருமண மண்டபமாக சில காலம் இருந்தது. கடந்த ஆறு மாதமாகப் பூட்டிக் கிடக்கிறது.
'தமிழ் அகம்' மீட்கப்பட்டு, மகாகவி பாரதியாரின் இல்லம்போல, நாவலர் சோமசுந்தர பாரதியாரின் 'தமிழ் அகம்' இல்லமும் தமிழ்நாடு அரசால் நினைவில்லமாக அறிவிக்கப்பட வேண்டும். 1998-ஆம் ஆண்டு அவரது நூல்கள் அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டபோதே, ஏன் எட்டயபுரம் 'தமிழ் அகம்' பங்களாவும் நினைவகமாக்கப்படவில்லை என்பது புதிராக இருக்கிறது.
தனது பரிதி பதிப்பகம் வாயிலாக ப.இளம்பரிதி வெளிக்கொணர்ந்திருக்கும் தொகுப்பு 'கரும்பலகைக் கதைகள்'. அந்தப் பெயரே சற்று வித்தியாசமாக இருந்ததால் படிக்கத் தோன்றியது. எடுத்தேன், முடித்தேன் என்று படிப்பதற்கு அது புதினமல்ல என்பதால், சற்று கால அவகாசம் தேவைப்பட்டது.
இந்த நூற்றாண்டின் தலைமுறையினருக்கும், எங்களது கடந்த நூற்றாண்டுத் தலைமுறையினருக்கும் ஒரு மிகப் பெரிய வித்தியாசமுண்டு. இப்போதெல்லாம் கல்வி என்பது வணிகமாகிவிட்ட நிலையில், 'ஆசிரியர்-மாணவர்' என்கிற உறவில் உணர்வுபூர்வப் பிணைப்பு இல்லாத வியாபாரத்தனம் மேலோங்கி இருக்கிறது என்பது எனது கருத்து. வழங்கப்படும் ஊதியத்துக்காக ஆசிரியர்களும், கட்டணம் செலுத்தி இருக்கும் உரிமைக்காக மாணவர்களும் இயங்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.
ஆசிரியர்-மாணவர் உறவை மையப்படுத்தி வெளிவந்த சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட வேண்டும் என்கிற இளம்பரிதியின் எண்ணத்துக்கு முதல் பாராட்டு; அதேபோலத் தங்களது வாழ்க்கையைச் செதுக்கிய ஆசிரியர்களை நினைவுகூரும் சில ஆளுமைகளின் கட்டுரைகளை வாங்கித் தொகுத்ததற்கு இரண்டாவது பாராட்டு; இதில் இடம் பெற்றிருக்கும் பல கதைகள், கட்டுரைகள் நம்மை இரண்டாவது முறை மீண்டும் படிக்கத் தூண்டுகின்ற அளவில் தேர்வு செய்திருப்பதற்கு மூன்றாவது பாராட்டு.
இளம்பரிதி கூறுவதுபோல, இந்தத் தொகுப்பின் 84 படைப்புகளும் மனதின் ஆழத்தில் உறைந்திருக்கும் நம் ஆசிரியரின் முகத்தையோ, நமது பள்ளிக்கால நினைவையோ மீட்டெடுத்து நம் கண்முன் நிறுத்துகின்றன!
பல இளம் கவிஞர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிப்பதில் கவிஞர் மு.முருகேஷைப்போல இன்னொருவர் கிடையாது. புதியவர்களுக்கு அணிந்துரை வழங்குவதும், அறிவுரைகள் தந்து அவர்களை செப்பமிடுவதும் தனது கடமை என்று கருதி செயல்படும் கவிஞர் முருகேஷால் பரிந்துரை செய்யப்பட்டவரின் கவிதைத் தொகுப்பு என்றால், அந்தத் தொகுப்பை நான் உடனே படித்து விடுவேன்.
கவிஞர் மு.அழகர்சாமியின் 'அசைவுகளின் அர்த்தங்கள்' விமர்சனத்துக்கு வந்திருந்தது. மு.முருகேஷும், பாஸ்கர் சக்தியும் அணிந்துரை வழங்கி இருக்கிறார்கள். அதிலிருந்து ஒரு கவிதை-
அடிப்படை வசதி
இல்லாத
வாக்குச் சாவடியில்
தேர்தல் பணி...
அடிப்படை வசதி
செய்து தருவதாகச் சொல்லும்
வேட்பாளர்களுக்காக...