
கம்பன் படைத்த காப்பியத்தில், தயரதன் மைந்தரான தம்பியர் இருவர்; அண்ணன்மார் இருவர்; பெற்ற தாயரோ, மூவர். கோசலை ஈன்ற குமாரன் இராமன்; கைகேயி பயந்த காளை பரதன். இலக்குவனும் சத்துருக்கனும் சுமித்திரையின் செல்வங்கள். இராமனும் இலக்குவனும், பரதனும் சத்துருக்கனும் இணைபிரியா அண்ணன் தம்பியராய் இக்காப்பியம் முழுதும் பயணம் செய்கின்றனர்.
இராமனும் இலக்குவனும், நெசவுக்குழலும் அதனோடு பொருந்திய நூலிழையும் போல் திரிகின்றனர் (306). பரதனும் சத்துருக்கனும், இராம இலக்குவரைப் போல, இணைபிரியாது இருந்தனர். இருவரும் ஒரு நொடி பிரியாது, 'எனை ஆள் வரதனும் இளவலும் என மருவினரே' (307) என்கிறான் கம்பன். உவமையில் கூடப் பிறிதொன்று காட்டிவிடக்கூடாதென்று ஒருமை கம்பனுக்கு.
ஏய வரங்கள் இரண்டின் மூலமாக, இராமனைக் கானகம் அனுப்பவும், பரதனை நாடாளவும் ஆணையிட்டவள் கைகேயி என்று தெரிந்து போர்க்கோலம் பூண்டு திரிகிற இலக்குவனை, “விதியின் பிழை, நீ இதற்கு என்னை வெகுண்டது' (1734) என்று அமைதிப்படுத்துகிறான் இராமன். பதிலாக, 'விதிக்கும் விதி ஆகும், என் வில் தொழில் காண்டி' (1735) என்கிறான் இலக்குவன். அந்த வெஞ்சினமும் தன்னம்பிக்கையும், இராவணன் சூழ்ச்சிப் படலத்தில் தவிடு பொடியாகின்றன.
மாய மானைப் பற்றிவரப் போன இராமனின் குரலில் மாரீசன் கதற, அது மெய்யெனக் கருதி சீதை துடிக்கிறாள். பதற்றப்படாமல் நிற்கும் இலக்குவன் மீது அனல் கக்குகிறாள்; ஏசுகிறாள்.
'நின்ற நின் நிலை இது நெறியிற்று அன்று' என்ற சீதை, இனி, 'எரியிடை விரைந்து வீழ்ந்து இறப்பேன்' என்று எச்சரிக்கிறாள்.
விதிக்கு விதி செய்யும் வில் என்ன செய்ய முடியும்? இலக்குவன், 'வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ?' (3333) என்று விதியின் முன் கைபிசைந்து நிற்கிறான்.
நிற்பது என்ன, போகிறேன் என்று புறப்படுகிறான். பேசி, விளக்கி, அவள் உயிரைப் பேண முடியாத நிலையில், விதியின் முன் அவன் இயலாமை மெளனவுருக் கொள்கிறது.
இங்கு, 'காட்டுத் தீயிடை இறப்பேன்' என்று கடிந்துரைத்த சீதை, மீட்சிப் படலத்தில், 'மூட்டு தீ' என்கிறாள். முன்பாவது, விதியை எண்ணி, முணுமுணுக்க முடிந்தது.
பிந்தைய படலத்தில் அதுதானும் இயலாத நிலை. இராமன் பேச்சு அனல் கக்குகிறது. தீயினும் சுடுகிற அவ்வெஞ்சொல்லால் வெம்பிய சீதை, தன் கற்பின் திறம் காட்ட, 'இடு தீ' என்கிறாள். இராமனும் கண் சாடை காட்டுகிறான்.
ஏங்கிய பொருமலின் இழி கண்ணீரினன்
வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும்
ஆங்குஎரி விதிமுறை அமைவித்தான்
என்கிறான் கம்பன்.
இலக்குவன் வாழ்வில் மெளனத்தைப் புகுத்திய நெருப்போ, சத்துருக்கன் வாழ்வில் மெளனத்தைக் குலைக்கிறது. காப்பிய முதன்மைப் பாத்திரங்களின் துணைப்பாத்திரங்களுள் ஒருவன், சத்துருக்கன்.
காப்பியத்தில் சத்துருக்கன் பேசுவதாக முதலில் அமையும் இடம், பள்ளிப் படைப்
படலம். தந்தை இறந்தபின் தாயகம்புகும் பரதன், அலங்கோலமாய்க் கிடக்கும் அயோத்திநகர் குறித்து, 'இளையவனே, மன்னன் வாழும் வளநகர் இதுதானா? மனம் வேறுபட்ட பகைவரது ஊர்போல, திருமகளொடு திருமால் நீங்கிய பாற்கடல் போல் கிடக்கிறதே' எனக் கேட்கிறான்.
இளையவனோ, 'திரு, அயோத்தியைவிட்டு அகன்றது, அதனால் இந்நகருக்கு பல துன்பங்கள் வந்திருக்க வேண்டும்' என்கிறான். அவன் கணித்ததுபோலவே காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறுகின்ற அவலத்தைக் காண முடிகிறது.
அவன் இறந்த தந்தைக்கு இறுதிக்கடன் நிறைவேற்றியபோது பேச்சே இல்லை. பின்னர் பரதன், சத்துருக்கனை அழைத்து, முரசு அறைந்து, 'இந்நகர் முறைமை வேந்தனைத் தருதும் ஈண்டு' என்பது சாற்றி, 'தானையை விரைவினில் எழுக என விளம்புவாய்' என்றான். (2264)
அதை அப்படியே செய்ததாகக் கம்பன் காட்டுவானே தவிர, அதனைச் சத்துருக்கன் சொல்லிய வாசகமாகக்கூடக் கம்பன் சொல்லவில்லை. செய்தி கேட்டு எழுந்த மக்களொடு முந்திக்கொண்டுவந்த மந்தரையைப் பற்றிக் கொல்ல விரைகிறான், சத்துருக்கன். அந்த இடத்தில்கூட, அவன் பேசவில்லை. அச்செயலை விலக்கிவிட்டுப் பரதன்தான் பேசுகிறான்- 'பெண் இவள் என்பதால் அல்ல, அண்ணன் கோபிப்பான். ஆதலால் விடுக' என்று. இவை தவிர, சத்துருக்கன் பேசும் இன்னொரு இடம், மீட்சிப் படலம்.
பரதன் சத்துருக்கனை அழைத்து, 'சொன்ன நாளில் இராகவன் வரவில்லை. தீ யிடை நான் வீடுவேன். ஆதலால் என் சொல் மறுக்காது நீ மன்னன் ஆகுக' என்கிறான்.
கேட்ட செவிகளை இறுகப் பொத்தி, துணுக்குற்று, 'நான் உனக்கு என்ன பிழைத்துளேன்?' என்று அரற்றுகிறான் சத்துருக்கன். அப்போது அவன் பேசியதை இரு பாடல்களில் கம்பன் எடுத்திசைக்கிறான்.
கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப்
போனானைக் காத்து, பின்பு
போனானும் ஒரு தம்பி; 'போனவன்
தான் வரும் அவதி போயிற்று''; என்னா,
ஆனாத உயிர் விட என்று அமைவானும்
ஒரு தம்பி; அயலே நாணாது,
யானாம் இவ் அரசு ஆள்வென்? என்னே,
இவ் அரசாட்சி! இனிதே அம்மா!
(10172)
தன் தரப்புச்செய்தி சொல்லி முடியாநிலையில் மேலும் விரிக்கிறான்:
'அண்ணன் போனபின் அவன் நகர் புகுந்து ஆட்சி செய்தான் என்ற பழிக்கு அஞ்சி, நந்தியம்பதியில் இருந்து அருந்தவம் புரிந்தாயே. இப்போது உனக்குப் பின் இருப்பேன் என என்னை நினைத்து, நீ தீப் புக எண்ணுகிறாய். உனக்குப் பின் நான் உயிரோடு இருப்பதும், நீ உள்ளபோதே நான் அரசாள்வதும் ஒன்றுதானே'(10173) 'உனக்கொரு நீதி எனக்கொரு நீதியா?' என்று நேர்படக் கேளாத சீரிய பண்பு சத்துருக்கனுடையது. அறச்சீற்றத்தில் இலக்குவன் எப்படியோ, அப்படி அன்பு வெளிப்பாட்டில் அடியார்க்கும் அடியாராய் இருப்பவன் சத்துருக்கன். பரதனோடு பழகியவன் அல்லவா?
முன்னவன் பேச்சும் செயலும் தீவிரம் என்றால், இப் பின்னவன் மெளனமும் பணியும் நுண்ணிது. ஆற்றொணா நிலையில் இலக்குவன் மெளனம் பூணுகிறான்; மிகமிக அவசியம் என்றால்தான் சத்துருக்கன் மெளனம் கலைகிறான். ஒரு தாய் வயிற்றில் பிறந்த தம்பியர் இருவரும் உடன் பிறவா அண்ணன்மார் இருவருக்கும் தொண்டுசெய்து, குடும்ப மானத்தையும் நாட்டின் பெருமையையும் காக்கிறார்கள் என்பது கம்பன் காட்டும் வாழ்வியல் ஒழுக்கம்.