தமிழில் 'சும்மா' என்கிற சொல்லுக்கு பிரத்தியேக இடம், பொருள் இல்லையா? என்னும்படி பல பொருள்படும்படியாக பயன்படுகிறது. அமைதி, செயலற்ற நிலை, வீண், இலவசம், பொய், சதா காலம், எப்போதும், தற்செயலாக, மீண்டும் மீண்டும், எதுவுமின்றி, களைப்பாறுதல், விளையாட்டிற்காக, வினையேதுமின்றி எனப் பல பொருள் தருகிறது.
'சும்மாது' என்ற சொல்லிலிருந்து 'சும்மா' என்று உருவாகியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலக்கையால் குத்தும்போது 'சும்சும்' என்று மூச்சு விடுவார்கள். அப்போது 'சும்மேலோ சும்முலக்காய்' என்று பாடுவதாக பரணி நூல்களில் வருகிறது.
'சும்முதல்' என்பதை மூச்சு விடுதல் என்று பொருள் கொண்டு, மூச்சு விடாமல் இருப்பதை 'சும்மாது இருத்தல்' என்று கொள்ள வேண்டும். பின்னர் இது சும்மா, பேச்சற்று, செயலற்று என்ற பொருள்கள் வந்திருக்க வேண்டும் என கி.வ.ஜெகந்நாதன் கூறியுள்ளார்.
'எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச்
சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமோ!'
- திருமந்திரம் -2635
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து தூங்காமல் தூங்கிச் சுகம் பெறும் நிலையை சும்மாயிருத்தல் என்கிறாரா பத்திரகிரியார். மனக்கட்டு நிலையை மொழிகிறது, பொறிகளின்மீது நாட்டம் இன்றி இறைநிலை ஒன்றையே குறியாகக் கொண்டவர்கள், உலக வாழ்க்கையில் பற்றற்று பரகதிப் பேரு எய்துவர். சேட்டைகள் செய்யும் குழந்தைகளை ஆற்றுப்படுத்துவதற்கு 'சிவனேன்னு இரு' என்கிற கூற்று இன்னும் பல ஊர்களில் புழக்கத்தில் உள்ளது.
'சும்மா இருந்துவிடாய் .....அகப்பேய்
சூத்திரஞ் சொன்னேனே'-
அரிய மந்திரங்களை அருளிய அகப்பேய்ச்சித்தர் அதைப் பயன்படுத்தாமல் விட்டுவிடாதீர்கள் என்று ஆர்வத்தோடும் உரிமையோடும் உலகோரை வேண்டும்படியாக அமைந்திருப்பது காணத்தக்கது.
'சிந்தையை அடக்கியே சும்மாயிருக்கின்ற திறம் அரிது'
- தாயுமானவர்
சாமானிய மனிதர்களால் செய்து முடிக்க முடியாத செயற்கு அரிய செயல்களையும் செய்து காட்டிவிடலாம்; ஆனால், சும்மா இருத்தல் மிகப்பெரிது என்று யோக நெறியின் தத்துவங்களில் நின்று சும்மா இருத்தலை அளவிடுகிறார் தாயுமானவர்.
'துன்றுமல வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்'
- இராமலிங்க அடிகள்
சிவயோக சித்தியாக 'சும்மாயிருத்தல்' இன்றைக்கு வருமா, அல்லது நாளைக்கு வருமா, என்றைக்கு வருமோ! அறியாமல் இருக்கின்றேன் என்று மனக்கண்ணால் எண்ணி மகிழ்ந்து காத்திருக்கிறார் வடலூர் வள்ளலார் பெருமான்.
பல தவ யோகிகளும், தத்துவ ஞானிகளும் சும்மா இருக்கும் நிலையை வெளிப்படுத்த 'சும்மா' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கின்றனர். பிற்காலத்தில் இடையூறு இல்லாமல் இருக்கவும், செயலற்று அமைதி நிலையை வலியுறுத்தவும், குறிக்கோள் இன்றி ஆற்றப்படும் வினையை சுட்டிக்காட்டவும் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது என்பதை யாவரும் அறியலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திரைப்படத் திறனாய்வுக்கு அறந்தை!
கரணம்

ஒற்றிழந்த 'தாய்க் கிழவி'

இந்த வாரம் கலாரசிகன் - 15-03-2026
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


