உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது மகாபாரதப் போர். தர்மத்துக்கும் அதர்மத்துக்குமான போர். இதில், சூழ்ச்சிகளும் எதிரியை வீழ்த்தும் உபாயங்களும் நிறைந்திருந்தது. ஆசார்ய துரோணர், பாண்டவர் படைகளை சிதறடித்துக் கொண்டிருந்தார். துரோணரை வீழ்த்தவில்லை என்றால் போர் முடிவுக்கு வராது என்பதை கண்ணன் அறிவான். துரோணரை வீழ்த்துவது எப்படி? துறவு மன நிலையில் இருந்த ஆசார்ய துரோணர், பிள்ளைப் பாசத்தை மட்டும் கைவிட்டாரில்லை. அதையே உபாயமாகக் கொண்டான் கண்ணன். அதன்படி, துரோணரின் பிள்ளையான, அசுவத்தாமன் கொல்லப்பட்டான் என்ற சொற்கள் துரோணரின் காதுகளில் விழும்படி தருமனிடம் உரக்கச் சொல்லச் சொன்னான் கண்ணன். காரணம், தர்மன் சத்தியம் தவறாதவன். அவன் வாக்கை துரோணர் நம்புவார் என்பதுதான். ஆனால், தர்மன் தயங்கினான். அதற்காகவே, அசுவத்தாமன் என்ற பேருள்ள யானையை பீமன் கொன்றுவிட்டு, அதைச் சொல்லச் சொன்னான். தருமனும், கொல்லப்பட்டது அசுவத்தாமன் யானை எனும் பொருள்பட, அசுவத்தாமா ஹத: குஞ்சர: என்றான். குஞ்சர: என்று தருமன் சொல்லும்போது, கண்ணன் பலமாக சங்கினை ஊதி, யானை என்கிற சொல் துரோணரின் காதுகளில் விழாமல் பார்த்துக் கொண்டான். முடிவு துரோணர் கொல்லப்பட்டு, பாண்டவர் பக்கம் வெற்றி சேர்ந்தது.