தசரதன் மூல மந்திரம் கேட்கப் பெற்ற தலம்: தனக்கு குழந்தைகள் இல்லையே என்று கவலைப்பட்ட தசரதச் சக்ரவர்த்தி, ரிஷிகளின் ஆலோசனையின் பேரில் புத்திரகாமேஷ்டி யாகம் செய்யத் தயாரானார். அந்த யாகத்துக்கான மூலமந்திரத்தை தசரதன் உபதேசம் பெற்ற இடம் இந்தத் தலமே. எனவே, இங்கே ஆதி ஜகந்நாதப் பெருமானை வழிபட்டால் புத்திர பாக்கியத்துக்கு நிச்சயம் வழி செய்வார் என்பது நம்பிக்கை. அதற்கு தம்பதியர், அதிகாலையில் சேதுக்கரை கடலில் நீராடி, கோயிலுக்கு வந்து, நாகர் சிலைக்கு வழிபாடு செய்யவேண்டும். ஒரு நாள் முழுதும் உபவாசம் இருந்து, நீராட வேண்டும். அன்றிரவு ஆலயத்தில் தங்கி, மறுநாள் காலை முறைப்படி நாகபிரதிஷ்டை செய்து, பிரசாதமாகத் தரப்படும் பால் பாயசத்தை அருந்த வேண்டும். இவ்வாறு தசரதன் பிரதிஷ்டை செய்த நாகலிங்கம் இந்தக் கோயிலில் உள்ளதாகச் சொல்கிறார்கள்.