கல்யாண வரமருளும் முருகன்
தமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கிராமம் தருவை. பாளையங்கோட்டையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.


தமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கிராமம் தருவை. பாளையங்கோட்டையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மிகப் பழைமையான வரலாற்றைக் கொண்ட தலமாகத் திகழ்கிறது தருவை.
தருவை கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் கிரந்த லிபி மற்றும் தமிழ் வட்டெழுத்துகளில் கோயிலைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இந்தக் கோயில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. சுமார் 350 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்த இந்த தருவை கிராமத்தில் கலையழகும் தெய்வீக அழகும் நிரம்பும்படி கோயில் எழுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக சுந்தர பாண்டியன் (1216-1239) காலத்தில் இங்கே கிராமக் கோயில்கள் பல எழுப்பப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றான இந்தக் கோயிலில் வாழவல்லப பாண்டீஸ்வரர் என்ற திருப்பெயருடன் பிரதான சுயம்பு லிங்க மூர்த்தியை எழுந்தருளச் செய்துள்ளனர். மேலும் இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின்படி, இந்த ஊருக்கு முற்காலத்தில் கூபக ராய நல்லூர் என்ற பெயர் விளங்கியிருக்கிறது. இந்த கிராமம் பாண்டிய மன்னனால் அவன் தளபதி கூபகராயனுக்கு தானமாக வழங்கப்பட்டதாகவும், நெல்லை மாவட்டத்தில் கங்கைகொண்டான் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு அவனது இந்தக் கோயிலில் இருந்து அரிசியும் பாலும் வழங்கப்பட்டதாகவும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
தருவை கிராமத்தில் மேலும் வரதராஜ பெருமாள் ஆலயமும், உய்யக்கொண்ட அம்மன் கோயிலும் உள்ளன. தற்போது கோயிலில் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், ஆலய முகப்பில் தோரண வாயிலும் கட்டப்படவுள்ளது.
பரிகாரம்: இங்குள்ள முருகப் பெருமானுக்கு கல்யாண முருகன் என்பது திருப்பெயர். கல்யாண வரமருளும் கார்த்திகேயனாக இங்கே வரமருளும் இந்தப் பெருமானிடம் வேண்டிக் கொண்ட நூற்றுக்கும் அதிகமானோருக்கு உடனேயே திருமண யோகம் கூடியுள்ளது. இந்த சந்நிதியில் குறுகிய காலத்தில் அறுநூறுக்கும் அதிகமான கல்யாணம் நடந்தேறியுள்ளதாம். திருமணம் ஆகாதவர்களுக்கு உடனே அந்த பாக்கியம் கிடைக்கிறது என்கிறார்கள். முருகப் பெருமானுக்கு சண்முகார்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். மனமுருக வேண்டிக் கொண்டவர்களுக்கு விவாஹம் உடனே கை கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இங்குள்ள கல்வெட்டுகள் சிலவற்றில் 4 வேதங்களும் எழுதப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். அவை மண்டபத்தின் பக்கவாட்டில் சுவரில் பதிக்கப்பட்டுள்ளன. தலத்தின் தீர்த்தம் அக்னி தீர்த்தம். இங்குள்ள மூலவர், மிகப் பெரிய லிங்க உருவில் காட்சி தருகிறார். உற்று கவனித்தால் சஹஸ்ர லிங்கம் சேர்ந்து செய்யப்பெற்ற லிங்கம் என்பது தெரியும். சதுர ஆவுடையில் பெரிய உருவில் திகழும் லிங்கப் பெருமான். இந்த அமைப்பில், இங்கே முதலில் லிங்கப் பெருமானை நிறுவி, பின்னர் சந்நிதி எழுப்பப் பட்டிருக்கலாம் என்கின்றனர்.
இங்கே சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் வெகு பிரசித்தம். வயிற்றில் பிரச்னை, குடல் தொடர்பான நோய்கள் உள்ளிட்டவற்றுக்கு பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதாக வேண்டிக் கொண்டு, அதன் பின்னர் அன்ன பிரசாதத்தை எடுத்து சாப்பிடுகின்றனர். அதன் மூலம் கோளாறுகள் சரியாவதை உணர்கின்றனர். இங்குள்ள அன்னை அகிலாண்டேஸ்வரி, திருவானைக்காவலைப் போல் திருநாமம் கொண்டு சிறப்பாக தனி சந்நிதியில் அருள் புரிகிறார்.
சந்நிதிகள்: வாழவல்லப பாண்டீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்பாள், கன்னி விநாயகர், சுப்பிரமணியர், அனுமன், குபேர மகாலட்சுமி, பைரவர், நவக்கிரஹம், ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு தனி சந்நிதிகள் உள்ளன.
தனிச்சிறப்பு: நெல்லை மாவட்டத்தில் 5 தலங்களில் சிறப்பான நடராஜர் உருவங்கள் உள்ளன. செப்பறை நடராஜர், கரிசூழ்ந்தமங்கலம் கோயில் போல், தருவையில் உள்ள இந்தக் கோயிலும் நடராஜர் திருவுருவுக்கு தனிச்சிறப்பு பெற்ற கோயில். இங்குள்ள முருகப் பெருமான் மூலவர் விக்ரஹம், திருவாசியுடன் ஒரே கல்லில் ஆன சிற்பத்தில் செதுக்கப்பட்டுள்ளது.
இருப்பிடம்: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் இருந்து சுமார் 10 கி.மீ., தொலைவு. மேலப்பாளையத்தை அடுத்து உள்ளது தருவை கிராமம்.
திருவிழாக்கள்: ஆடிப் பூர பெருந் திருவிழா, சங்கடஹர சதுர்த்தி, கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை, பெüர்ணமிகளில் திருவிளக்கு பூஜை, நடராஜர் தரிசனம் ஆருத்ரா தரிசனம் உள்ளிட்டவை முக்கியத் திருவிழாக்கள்.
தகவலுக்கு: 94862 52278
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...