சர்க்கரை நோய் தீரும்

கொங்கு நாட்டின் ஒரு பகுதியை வளப்படுத்தும் அமராவதி ஆற்றின் கரையில் 10க்கும் மேற்பட்ட வழிபாட்டு சிறப்புமிக்க சிவாலயங்கள் உள்ளன.
Updated on
2 min read

கொங்கு நாட்டின் ஒரு பகுதியை வளப்படுத்தும் அமராவதி ஆற்றின் கரையில் 10க்கும் மேற்பட்ட வழிபாட்டு சிறப்புமிக்க சிவாலயங்கள் உள்ளன. அதில் ஒன்று திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டைக்கு  அருகில், மடத்துக்குளம் வட்டத்தில் அமைந்துள்ள கடத்தூர் அர்ச்சுனேசுவரர் திருக்கோயில். உடுமலையிலிருந்து கணியூர் வழியாக பழனி மற்றும் தாராபுரம் செல்லும் சாலையில் சுமார் 23 கி.மீ.  தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. நகரப் பேருந்துகள் இவ்வூருக்கு வந்து செல்கின்றன. பசுமையான வயல்கள், தென்னை மரங்கள், மருத மரங்கள் சூழ அமராவதி ஆற்றின் கரையில் இயற்கை  சூழலில் இக்கோயில் அமைந்துள்ளது.

மருதவன ஈசுவரர்: இத்திருக்கோயிலில் எழுந்தருளும் சுயம்பு வடிவான இறைவனை மருதீசர், மருதுடையார், மருந்தீசர், அர்ச்சுனேசுவரர் எனவும், இறைவியை கோமதி அம்மன் எனவும் போற்றி  வழிபடுகின்றனர்.

திருக்கோயில் அமைப்பு: திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அமராவதி ஆறு கோயில் அருகே வளைந்து ஓடுகிறது. அதிகாலையில் சூரிய ஒளி அமராவதி ஆற்று நீரில் பட்டு, சுயம்பு  வடிவான இறைவன் மீது படும் அற்புதக் காட்சி இத்தலத்தின் சிறப்பு. கிழக்கு வாயிலில் மூன்று நிலை கோபுரம் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

திருக்கோயில் திருச்சுற்றில் வலம்புரி விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, பைரவர் சந்நிதிகள் அமைந்துள்ளன. வாயிலின் முன்பு பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. சுவாமி சந்நிதியின்  கருவறையின் தெற்கு தேவகோட்டத்தில் வெள்ளை நிற பளிங்குக் கல்லால் ஆன தட்சிணாமூர்த்தி வடிவம் வழிபடப் பெறுகின்றது. இத்திருமேனி காசியிலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறுகின்றனர்.

கோமதி அம்மன்: இறைவனது வலது பக்கம் அதாவது தெற்குப் பகுதியில் கிழக்கு நோக்கி இறைவி சந்நிதி அமைந்துள்ளது சிறப்பு. இறைவி உலக உயிர்களைக் காக்கவும், துன்பத்தைப் போக்கவும் மருத  மரத்தின் கீழ் தவமிருந்து அருள் வழங்குகிறாள் என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. சந்நிதி வாயிலின் அருகே அனைவராலும் வணங்கப்படும் புற்று பெரிய அளவில் காணப்படுகிறது.

புராண வரலாறு: பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின்போது இப்பகுதியில் மறைந்து வாழ்ந்ததாக புராண வரலாறு கூறுகிறது. இத்திருக்கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாய் விளங்குகிறது. இக்கோயிலில்  காணப்படும் 70க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் வெளியிட்டுள்ளனர். கொங்கு சோழர்களான வீர சோழன், வீர நாராயணன்,வீர ராஜேந்திரன், விக்கிரம சோழன்  ஆகியோர் 12-13ஆம் நூற்றாண்டுகளில் இத் திருக்கோயிலுக்கு பெருந்தொண்டு செய்துள்ளனர். சிறப்பான வழிபாட்டிற்காக தானமும் அளித்துள்ளனர்.

இறைவன் "ஆளுடையார் திருமருதுடையார் கோயில் மருதவனப் பெருமாள்'' என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறார். மேலும் இவ்வூர் ""கடற்றூர் ஆன இராசராச நல்லூர்'' என அழைக்கப்படுகிறது.

இறைவனுக்கும், தேவிக்கும், பிள்ளையார், பைரவர் ஆகியோருக்கும் சனிக்கிழமை தோறும் எண்ணெய்க்காப்பு செய்யவும், சந்தியா தீபம் ஏற்றவும் தானம் அளிக்கப்பட்டுள்ளது. கருமுகை போன்ற மலர்  மாலை கொடுக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் கார்த்திகை விழா நடைபெறும்பொழுது அப்பம் அமுது படைக்கவும், தைப்பூசத் திருவிழா நடத்தவும் தானம் அளிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் அருகே  "தண்ணீர் பந்தல்' அமைக்கவும், இத்திருக்கோயிலில் திருவெம்பாவை பாடல்கள் ஓதுவதற்கும் தானம் கொடுக்கப்பட்டுள்ளது. பாடல்களைப் பாடுபவர்களை "திருவெம்பாவைத் திருத்தாள் கூட்டம்' எனக்  கல்வெட்டு குறிப்பிடுகிறது. இக்கோயிலின் தூண், உத்திரம், வாசற்கால், கதவு போன்ற கட்டடப் பகுதிகளை பலர் தானம் அளித்துள்ளனர். பலர் ஒன்றிணைந்து இக்கோயிலை அமைத்துள்ளனர் என்பதை  அறியும்பொழுது வியப்பு மேலிடுகிறது. கோயிலின் கட்டக் கலையின் பகுதிகளின் பெயர்களையும் அறிய முடிகிறது. திருக்கோயில் முழுவதும் கல்வெட்டுகளாகக் காணப்படுவது இத்தலத்தின் சிறப்பு.

சர்க்கரை நோய் தீரும் : கொங்குச் சோழனான மூன்றாம் விக்கிரம சோழன் (கி.பி. 1302) ஆட்சியின் போது விக்கிரம சோழன் திரிபுவன சிங்கன் என்பவனுக்கு பிரமேகம் என்ற சர்க்கரை நோய் வந்தது.  கடத்தூர் மருதுடையாரை வேண்டித் தொழ இறைவன் அருளால் அந்நோய் நீங்கியது. எனவே இறைவனுக்கு அமுது செய்ய நிலம் அளித்தான் அந்த அரசன். ஆகவே சர்க்கரை நோயினால்  துன்பப்படுபவர்கள் இத்தலத்து இறைவனை வேண்டி நலமடையலாம்.

விசேஷங்கள்: இக்கோயிலில் சிவராத்திரி, பிரதோஷம், அன்னாபிஷேகம், அஷ்டமி பைரவர் பூஜை, ஆடிப்பூரம் போன்ற வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளிலும், வளர் பிறை பஞ்சமி, பௌர்ணமி திதி அன்றும் திருமணத் தடை நீங்க பரிகார பூஜை நடைபெறுவதால் இத்திருத்தலம் "தென் திருமணஞ்சேரி' எனவும் சிறப்பித்து  அழைக்கப்படுகிறது.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6.30 - 12.30, மாலை 4.30 - 7.00

தகவலுக்கு: 97151 34275

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com