தெய்வ சக்தியை ஈர்த்து மனிதனுக்கு கொடுக்கும் ஆற்றல் ருத்ராட்சத்துக்கு உண்டு. பல்வேறு முகங்களைக் கொண்ட ருத்ராட்சம் பல்வேறு தெய்வ அம்சங்களைக் கொண்டதாகும். ருத்ராட்சம் மருத்துவத் துறையிலும் பயன் படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு முகம் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திர விநாயகர் கோயிலுக்கு சுமார் ஒரு லட்சத்திலான ருத்ராட்சங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட அத்தி விருட்ச ருத்ராட்ச லிங்கத்தினை காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காணிக்கையாக வழங்கியிருந்தார்.
இந்த லிங்கத்தை பிரஸ்திஷ்டை செய்து, அத்துடன் புதியதாக அமைக்கப்பட்ட ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசிவசுப்பிரமணியர் சந்நிதிகளுக்கும் கடந்த வாரம் (டிச. 4-இல்) மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயிலில் அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களின் அதிதேவதைகளையும், அவற்றிக்குரிய 27 விருட்சங்களையும் ஒரு சேர தரிசிக்கலாம். ராகு, கேது, சனீஸ்வரர்களுக்கு தனித் தனியாக சந்நிதிகள் உள்ளன.
நடுநாயகனாக ஸ்ரீநட்சத்திர விருட்ச விநாயகர் எழுந்தருளி அருள்பாலித்து வரும் இத்திருக்கோயிலில், ஆண்டுதோறும் சனிப் பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, காணும் பொங்கல் அன்று 108 கோமாதா பூஜை எனப் பல்வேறு பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு: வி.சுவாமிநாதன் - 9445120996.