அமெரிக்காவில் நடந்த சம்பவம் இது. உடல் எடை அதிகமான இளம் பெண் ஒருவர், "ஒரே மாதத்தில் உடல் எடை குறைக்கப்படும்' என்ற விளம்பரத்தைப் பார்த்து, அந்த உடற்பயிற்சி மையத்திற்குச் சென்றார்.
அவர்கள் சொன்னார்கள், ""உடல் எடையைக் குறைப்பது தொடர்பான உடற்பயிற்சி வகுப்புகள் அடங்கிய குறுந்தகடுகளை உங்களுக்கு தருகிறோம். அதனை நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தே பார்த்து செய்துகொள்ளலாம்!'' எனக் கூறினார்கள்.
உடனே அந்த இளம் பெண்ணுக்கு அதிக சந்தோஷம். "ஒரே மாதத்தில் உடல் எடை குறைந்து அழகாக மாறிவிடலாம்' என எண்ணி ஆனந்தப்பட்டார்.
அவர்கள் சொன்னதுபோல, வீட்டுக்குச் சென்று குறுந்தகட்டை தனது டிவியில் போட்டுப் பார்த்தார். அவர்கள் குறித்த நாள்களும் முடிவடைந்தன. ஆனாலும், இவரது எடை கூடிக்கொண்டே சென்றதே தவிர, குறையவில்லை. இது குறித்து உடல் எடை குறைப்பு மையத்திற்கு அந்தப் பெண் போன் செய்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இவரை பரிசோதிப்பதற்காக, அந்த மையத்தினர் அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அப்போதுதான் அவர்களுக்கு புரிந்தது... அவர் குறுந்தகடுகளை டிவியில் ஓடவிட்டு பார்த்துக்கொண்டு மட்டும்தான் இருந்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளபடி எந்தவித உடற்பயிற்சி
களையும் செய்யவில்லை என்று.
அப்போது, அந்த மையத்தினர் கூறினர், ""இந்தக் குறுந்தகடுகள் பார்ப்பதற்கு மட்டுமல்ல... அதன்படி செய்வதற்கு.... எனவே, அதில் குறிப்பிட்டுள்ளபடி உடற்பயிற்சி செய்யுங்கள்'' எனக் கண்டிப்புடன் கூறிச் சென்றனர்.
இந்த சம்பவத்தில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், நாம் வாழ்வில் வெற்றிபெறுவதற்கும்... வாழ்வில் மாற்றம் அடைவதற்கும் நமது செயல்பாடு மிகவும் அவசியமாகும். இதை பரிசுத்த வேதாகமத்தில், "அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத் தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்' என நீதி மொழிகள் 12:14 -ஆம் வசனத்தில் கூறப்பட்டுள்ளது. நமது செயல்பாடுகளின் பலனுக்குத் தக்கதாக நமக்கு கிடைக்கும். நமது செயல்பாடுகள் தேவனுக்கு பிரியமாக இருந்தால் அதனை அவர் வாய்க்கச் செய்வார்.
தேவனை தினமும் வணங்குகிறேன். பரிசுத்த வேதாகமத்தில் உள்ள வார்த்தைகளை தினமும் தியானிக்கிறேன் ஆனால், வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லையே என நினைக்கலாம். நாம் தேவனின் வார்த்தைகளான பரிசுத்த வேதாகமத்தை தியானிப்பதோடு மட்டுமல்லாமல், அதில் குறிப்பிட்டுள்ளபடி செய்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். தேவனுக்குப் பிரியமாக செயல்படுவோம்... தேவன் வெற்றிகளைத் தருவார்.