சனி பகவான் ஆயுள் காரகர் ஆகிறார். மரணம் ஆகியவற்றைக் குறிக்கும் எட்டாம் வீட்டுக்குரியவர், எட்டாம் வீட்டிற்கு எட்டாம் வீடான (பாவாத் பாவம்) மூன்றாம் வீட்டுக்குரியவர், லக்னாதிபதி, ஆயுள் காரகரான சனி பகவான் ஆகியோர் சிறப்பான பலம் பெற்றிருந்தால் பூர்ணாயுள் (92 வயதுக்கு மேல்) உண்டாகும்.
சனி பகவான் லக்னம் / ராசியைப் பார்வை செய்தால் "மகா கீர்த்தி யோகம்' என்றும் லக்னத்திற்கோ, ராசிக்கோ ஏழாம் வீட்டில் இருந்தால் திக்பலம் பெறுவார் என்றும் உள்ளது. இத்தகைய நிலைமையில் இருந்தால் செயல் வேகம், தனித்திறமை ஆகியவை உண்டாகும். வெளிநாடு செல்லும் யோகத்தைக் கொடுப்பவரும் சனி பகவானாவார். "மந்தன்' என்று பெயர் பெற்றுள்ள சனி பகவானின் தசையில் மெல்ல மெல்ல சிறப்பான வளர்ச்சிகள் உண்டாகிவிடும். சனி பகவான் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் சமூகத்திற்கு உழைக்க வேண்டும், சமூகத்திற்கு பயன்பட வேண்டும் என்கிற நிலை நிச்சயமாக உண்டாகும்.
நிலம், மனை இவற்றால் லாபம், நிலக்கரி, எண்ணெய், ஈயம் இவற்றாலும், பஞ்சாயத்து, பொதுநலப்பணி, தார்மீகப்பணி, அரசுப் பணி ஆகியவைகளுக்கும் தலைமுடி, பல், காயம்படுதல், கால்கள், நகங்கள், சஸ்திர சிகிச்சை ஆகியவற்றிற்கும் சனி பகவான் காரகத்துவம் பெறுகிறார்.
சனி பகவான் ஜாதகருக்கு வலு இல்லாமலும், ஆட்சி, உச்சம் பெறாமலும், சுப கிரகப் பார்வை, சேர்க்கை இல்லாமலுமிருந்தால், அந்த சனி பகவானால் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது.
பலம் பெற்ற சனி பகவானால் தனம் சேரும், தானியங்கள் சேரும், குடும்பம் சுபிட்சமடையும், கீர்த்தியடையும், சுகத்தை அனுபவிக்கலாம், அதீத செல்வாக்கு (இன்ஃப்ளூயன்ஸ்) பெறலாம்; கிராமத் தலைவராகவும் ஆகலாம்.