கிருத யுகத்தில் தியானத்தாலும், திரேதாயுகத்தில் யாகத்தாலும், துவாபர யுகத்தில் அர்ச்சனையாலும் கிடைத்த பகவானின் அருள் இந்தக் கலியுகத்தில் மிகவும் எளிமையான நாம சங்கீர்த்தனம் செய்தாலே பெற்றுவிட முடியும்.
""கோவிந்தா...! கோவிந்தா...!'' என்று இறைவன் நாமாவளியைச் சொல்லிக் கொண்டிருந்தாலே போதும், கோடி புண்ணியம் நமது கணக்கில் சேர்ந்துவிடும்.
-ஸ்ரீமத் பாகவதத்தில் சுகப்பிரம்ம மகரிஷி பரிக்ஷீத் மன்னனுக்குக் கூறியது.
நெருப்புக்கு முன்னால் வைக்கப்பட்ட பஞ்சு மூட்டை நெருப்பு பட்டவுடன் எரிந்து சாம்பலாகும். அதுபோல், பக்குவப்பட்ட நல்ல மனதால் பாவம் விலகிப்போகும்.
-இடைக்காட்டுச் சித்தர்
பரிசுத்தமான ஆத்மபுத்தியால் இந்திரியக் கூட்டத்தை (ஐம்புலன்களை) அடக்க வேண்டும். பரமாத்மாவான பரவாசுதேவனைப் பற்றியே தியானம் செய்ய வேண்டும்.
-உபநிஷதஸாரம்
சிவபெருமானே! நீ மதுரையில் வைகை ஆற்றில் அணை கட்ட வந்தாய், பிரம்படி பட்டாய், அந்த அடியை எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுத்தாய். அதே சமயத்தில் வாணிச்சியின் பிட்டைச் சாப்பிட்டாய். அந்தப் பிட்டை ஏன் மற்றவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கவில்லை?
அடி மட்டும் எல்லோரும் பட வேண்டும்! திண்பண்டங்களால் நீ பங்கிடக் கூடாதா?
-அப்பைய தீக்ஷிதர் இயற்றிய "சிவலீலார்ணவம்'
முருகப் பெருமானே! உன்னை நான் மறக்கமாட்டேன்; ஐம்பொறிகளுக்கும் இடம் தந்து, இரண்டு கால்களும் அமைத்து, அங்கேயே இரண்டு கைகளையும் வைத்து அமைக்கப் பெற்ற இந்த உடம்பாகிய வீடு அழிவதற்கு முன்பே நீ வந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்.
- ஸ்ரீ அருணகிரிநாதர், கந்தரலங்காரம் 23-ஆம் பாடல்.
பரம்பொருள் ஒருவனே; அவனைப் பல்வேறு சமயத்தினர் பல்வேறு உருவங்களும் பெயர்களும் கொடுத்து வணங்கி வருகிறார்கள்; என்றாலும் அவர்கள் தாங்கள் கொண்ட வடிவமே அல்லது உருவமே இறைவனது முழு உருவம் என்று பிடித்துக்கொள்கிறார்கள். ஆனால் இறைவனின் முழுத்திருவுருவம் ஒரு வடிவில் அடங்கிவிடுமோ?
- கம்பராமாயணம், பால காண்டம், உலாவியற் படலம் - 19
"உடல் தன்னைக் காட்டிலும் வேறு' என்று பிரித்துச் சைதன்யத்தில் நிலை பெற வேண்டம். அவ்விதம் செய்தால், இந்த க்ஷணமே நீ சுகத்தையும் அடைந்து, பந்தத்திலிருந்து விடுதலையும் அடைந்தவனாவாய்.
-அஷ்டாவக்ர கீதை