பாச நபிகளின் நேசத்துக்குரியவர்!

ஆமிர் என்ற இயற்பெயர் பூண்ட உபைதத்துப்னுல் ஜர்ராஹ் (ரலி) இஸ்லாத்தின் எதிரியாக இருந்தார்.
பாச நபிகளின் நேசத்துக்குரியவர்!
Updated on
1 min read

ஆமிர் என்ற இயற்பெயர் பூண்ட உபைதத்துப்னுல் ஜர்ராஹ் (ரலி) இஸ்லாத்தின் எதிரியாக இருந்தார். ஆபூபக்கர் சித்தீக் (ரலி) கையைப் பிடித்து கலீமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றார். கலிமா என்பது இறைவன் ஒருவன், அவனின் திரு தூதர் முஹம்மது நபி (ஸல்) என்று உள்ளத்தில் உணர்ந்து உறுதி கூறுவது.
அபூ உபைதா (ரலி) அபிசீனியாவிற்கு முதல் ஹிஜ்ரத் செய்தார்கள். பிறகு மதினாவில் குடியேறி னார்கள். பத்ரு போரில் அவர்களின் தந்தையை எதிர்த்து போரிட்டார்கள். அபூ உபைதா (ரலி) அவர்களின் வாளுக்கு அவர்களின் தந்தை இரையானார். 
உஹத் போரில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் உடலில் பாய்ந்த இரும்பு துண்டுகளை இவர்களின் பற்களால் கடித்து இழுத்ததில் இவர்களின் இரு பற்கள் விழுந்தன.
ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு நம்பிக்கைக்குரியவர் உண்டு. என் சமூகத்தின் நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா (ரலி). ஏமன் நாட்டினர் எங்களுக்கு இஸ்லாத்தைக் கற்றுத் தர தக்கவரை அனுப்புங்கள் என்று கேட்ட பொழுது, அபூ உபைதா (ரலி) அவர்களின் கைகளைப் பிடித்து "இந்த சமூகத்தின் நம்பிக்கைக்குரியவர் இதோ இருக்கிறார்!' என்று இனிய நபி (ஸல்) அவர்கள் இயம்பியதை அறிவிக்கிறார் அனஸ் (ரலி). நூல்- புகாரி, முஸ்லிம், திர்மிதீ.
ஹிஜ்ரி  8 -ஆம் ஆண்டு ரஜபு மாதத்தில் இவர்களின் தலைமையில் இஸ்லாமிய படை ûஸபுல் ஹஜ்ரை நோக்கி சென்ற பொழுது உணவு தீர்ந்து விட்டது. ஆளுக்கு அரை பேரீச்சம் பழமே ஒரு நாளுக்கு உணவானது. அப்பொழுது அல்லாஹ்வின் அருளால் ஒரு பிரம்மாண்டமான மீன் கடற்கரையில் ஒதுங்கியது. 
அதன் கொழுப்பை உருக்கியதில் குடம் குடமாக நெய் கிடைத்தது. அந்த மீன் அந்தப் படையினரின் ஒரு மாத உணவிற்குப் போதியதாக இருந்தது. 
படை திரும்பியதும், திரு நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ் அளித்த அருளுணவு மீனில் மீதம் ஏதும் உள்ளதா?' என்று கேட்டு, அதனைப் பெற்று அவர்களும் 
உண்டார்கள்.
பாச நபி (ஸல்) அவர்கள் பகர்ந்தபடி பஹ்ரைனுக்குச் சென்று ஜகாத்தை வசூலித்து வந்தார்கள். அத்தொகையை  அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வறுமையில் வாடினோருக்குப் பிரித்து வழங்கினார்கள்.
அகதிகளுக்குப் பொது நிதியிலிருந்து அளிக்கப்படும் உதவித் தொகை அளவிற்கு, கலீபாவிற்கு ஊதியம் நிர்ணயித்தார் அபூ உபைதா (ரலி).
பிளேக் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உற்ற துணை புரிந்து, சளைக்காது களைக்காது, கடும் பாடுபட்ட அபூ உபைதா (ரலி) பிளேக் நோய்க்கு உள்ளாகி, அம்வாஸ் என்ற இடத்தில் கி.பி. 639-இல், 58 வயதில் இறந்தார். அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். இன்றும் இவர்களின் அடக்கவிடத்திற்கு மக்கள் மரியாதையுடன் சென்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com