குலம் காக்கும் கோனியம்மன்

 கோவை அரசி, காப்புத்தெய்வம், கிராமத் தேவதை... எனப் பலவாறு கோவைவாழ் மக்களால் போற்றப்படுபவள் கோனியம்மன். 
குலம் காக்கும் கோனியம்மன்
Updated on
1 min read

 கோவை அரசி, காப்புத்தெய்வம், கிராமத் தேவதை... எனப் பலவாறு கோவைவாழ் மக்களால் போற்றப்படுபவள் கோனியம்மன்.
 பழங்காலத்தில் பேரூரை அடுத்துள்ள புத்தூரை கோவன் என்ற இருளர் தலைவன் வனப் பகுதியைச் சீரமைத்து நாடாக்கினான். அதனால் இவ்வூர் அந்த மன்னன் பெயரால், "கோவன்புத்தூர்' என அழைக்கப்பட்டது. அதுவே மருவி, "கோயம்புத்தூர்', "கோயமுத்தூர்' என்று அழைக்கப்படுகிறது.
 இருளர் தலைவனான கோவன் தன்னுடைய குடிசைக்கு அருகே ஒரு கல்லை நட்டு, சிறு கோயில் ஒன்றை எழுப்பினான். அதையே அந்தப் பகுதி மக்கள் குலதெய்வமாக வழிபட்டனர். அம்மனுக்கு விழாக்கள் எடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர். அந்தத் தெய்வமே இன்றைய கோனியம்மன்.
 "கோன்' என்பது அரசனைக் குறிக்கும் ஆண்பால் சொல்லாகும். அதேபோல "கோனி' என்பது அரசியைக் குறிக்கும் பெண்பால் சொல்லாகும். நாட்டைக் காக்கும் தெய்வமான இந்த அம்மனை " கோனியம்மன்' என்று வணங்கிப் போற்றுகின்றனர். கோவன் ஆட்சிக்குப் பிறகு இளங்கோசர்கள் கோனியம்மனை வழிபட்டு வந்தனர்.
 கோசர்கள் ஆட்சிக்குப் பின்னர், எஞ்சி நின்ற சிரசே இன்று "ஆதி கோனியம்மனாக' ,தற்போதைய புதிய கருவறையின் பின்புறம் தனிச் சந்நிதியில் வைக்கப்பட்டுள்ளது. அன்னையின் திருமுகம் இன்றும் பொலிவோடு காணப்படுகிறது. சிரசுடன் சப்த கன்னிகளும் அமைந்துள்ளனர்.
 அன்னை மூன்றடி அகலமும், இரண்டரை அடி உயரமும் கொண்டு எளிய வடிவில் வடக்கு வாயிற்செல்வியாக காட்சி அளிக்கிறார்.
 கோவை வாழ் மக்களின் திருமணச்சடங்கில் முக்கியமான நிச்சயதார்த்தம் உப்பு, மஞ்சள் மாற்றிக் கொள்வதன் மூலமே உறுதி செய்யப்படுகிறது. கோவை மாநகரைப் பொருத்தவரை உப்பு, மஞ்சள் வாங்குதல் என்றாலே கோனியம்மன் கோயிலுக்குத்தான் என்ற அளவில் இன்றும் புகழ் பெற்று விளங்குகிறது.
 மாசி மாதத்தில் நடைபெறும் தேர்த் திருவிழாவே பிரமோற்சவமாக பதினான்கு நாள்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
 திருமணத் தடை, உடல் நலக் குறைபாடு, காரியத் தடை உள்ளிட்டவை நீங்கி சுகம் பெற அம்மனை வேண்டினால் அருள்பாலிப்பார் என்பது ஐதீகம். திருமாங்கல்ய காணிக்கை, உலோகத்திலான கண், கை, கால் போன்ற உடல் உறுப்பு காணிக்கைகள், மண் பொம்மை காணிக்கைகள் முதலானவற்றை நேர்த்திக் கடனாகச் செலுத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர்.
 கோவை மாநகரில் பெரிய கடை வீதியில் ஏழுநிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமான முறையில் கோயில் அமைந்துள்ளது. கோட்டை ஈஸ்வரன் கோயில், பேட்டை ஈஸ்வரன் கோயில்களுக்கு நடுவில் கோனியம்மன் கோயில் இருக்கிறது.
 அன்னையை கோவைவாழ் மக்கள் மட்டுமன்றி, நாட்டின் பல்வேறு பகுதி மக்களும் நம்பிக்கையோடு வணங்கிச் செல்கின்றனர்.
 -பனையபுரம் அதியமான்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com