சிவனும் விஷ்ணுவும் இணைந்த தலம்

சிவனும் விஷ்ணுவும் இணைந்து காட்சி அருளும் கோயில்கள் குறைந்த எண்ணிக்கையில்தான்  அமைந்துள்ளன.
சிவனும் விஷ்ணுவும் இணைந்த தலம்
Updated on
1 min read

சிவனும் விஷ்ணுவும் இணைந்து காட்சி அருளும் கோயில்கள் குறைந்த எண்ணிக்கையில்தான்  அமைந்துள்ளன. ஆனால், புகழ் பெற்ற ஆதி திருத்தலமாக விளங்குவது சங்கரநாராயணன் கோயில்தான். இந்தக் கோயிலின் மீதான பற்றால் இதே ஐதீகத்தில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் சங்கரநாராயணர் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

நல்லூர் என்பது மன்னர்கள் காலத்தில் அந்தணர்களுக்கு இறையிலியாக வழங்கப்பட்ட ஊரைக் குறிப்பதாகும். இது சோழர் காலத்தில் வழங்கப்பட்டதால்,  "சோழங்கநல்லூர்' என அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெயர்  மருவி இன்று "சோழிங்கநல்லூர்' எனக் கூறப்படுகிறது.

இங்கு புவியில் இருந்து வெளிப்பட்டுள்ள தெய்வத் திருமேனிகள் கலைநயத்துடன் விளங்குகின்றன. இவை சைவ,  வைணவத்தைச் சமமாகப் பாவித்து கோயில்களை எழுப்பிய விஜயநகர மன்னர் காலத்தைச் சேர்ந்ததாக தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், இங்குள்ள நந்தி நாயக்கர் காலத்தை சார்ந்ததாக கருதப்படுகின்றது.

1970- ஆம் ஆண்டு விவசாயிகள் சிலர் அங்கு விவசாயப் பணிக்காக வயலில் ஏர் உழுதபோது, ஓரிடத்தில் ஏர் கலப்பை உழ முடியாமல் தடுத்தது.  மண்ணில் மறைந்திருந்த சிவலிங்கம்,  விஷ்ணு,  தாயார், கல் திருமேனிகள் கிடைத்தன. இதைக் கண்டு பரவசம் அடைந்த அந்தப் பகுதி மக்கள்,  அங்கேயே சிறு கூடாரத்தை ஏற்படுத்தி, அதில் அந்தத் திருவுருவங்களை வைத்து வழிபடத் தொடங்கினர்.

இதன்பின்பு 1986 -ஆம் ஆண்டு சுவாமி,அம்பாளுக்கு தனித்தனி சந்நிதிகள் அமைத்து குட முழுக்கு விழாவும் நடத்தப்பட்டது.  பத்து ஆண்டுகள் கழித்து பெருமாளுக்கு தனிச் சந்நிதி எழுப்பப்பட்டு மீண்டும் குடமுழுக்கு விழா நடந்தேறியது.

இங்கு வருகைதந்த காஞ்சிப் பெரியவர் இத்தலத்தின் பெருமையை அறிந்து, இங்கு தியானம் செய்தார். அதன்பின்னர் இங்குள்ள லிங்கத்திருமேனியை "சங்கர நாராயணர்' என்றும், அம்மனை அன்னை கோமதி என்றும், விஷ்ணுவை  "ஸ்ரீநிவாச வரதராஜப் பெருமாள்'  என்றும் பெயரிட்டு அழைத்தார். 

இந்தக் கோயில் விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் பங்கேற்றுள்ளார்.  இந்தக் கோயில் மீது பக்தி கொண்ட நடிகர் ஜெமினி கணேசன் தனது குடும்பத்தினரோடு வழிபட்டு,  திருப்பணியிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்.

சென்னை மாநகரின் சோழிங்கநல்லூர் ஓ.எம்.ஆர். மற்றும் இ.சி.ஆர். இணைப்புச் சாலையின் இடையில் செல்லும் கிராம நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

இந்தக்  கோயில் முழுவதுமாக கருங்கல் திருப்பணியாகப் புனரமைக்கப்படுகிறது.  

"திருப்பணியில் அனைவரும் பங்கேற்று,  அதன் பயனால்,  குருவின் ஆசிகளையும், சைவ,  வைணவத் தெய்வங்களின் அருளையும் பரிபூரணமாகப் பெற்று  நலமோடு வாழலாம்' என திருப்பணியை முன்னெடுத்து வரும் சிவனடியார் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.

தொடர்புக்கு -  9444771615.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com