

தனது 'ஸ்கூல் பேக்'கில் வெடிகுண்டு இருப்பதாக நகைச்சுவையாக கூறிய 12-வயது சீக்கிய சிறுவனை அமெரிக்க போலீஸார் கைது 3 நாள்கள் சிறையில் அடைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுவனின் உறவுப்பெண் ஒருவர் சமூக வலைத்தளமான 'பேஸ்புக்'கில் எழுதிய பிறகே இச்சம்பவம் குறித்து வெளியே தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வதிக்கும் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர் அர்மான் சிங் சாராய் (12). இங்குள்ள நிக்லோஸ் உயர் நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற அர்மான், தனது சக மாணவரிடம் தனது 'ஸ்கூல்பேக்'கில் வெடிகுண்டு இருப்பதாக நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். இதை அதை அச்சிறுவன் ஆசிரியரிடம் கூற, அவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த போலீஸார் அர்மான் சிங்கை கைது செய்து அழைத்துச் சென்றுவிட்டனர்.
எவ்வித விசாரணையும் இன்றி, பெற்றோரிடம் கூட தகவல் தெரிவிக்காமல் அர்மானை போலீஸார் அழைத்து சென்றதாக அவரது உறவுப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளி முடிந்து வீடு திரும்பாத மகனை பல இடங்களில் தேடிய அர்மானின் பெற்றோர், கடைசியில் அவர் ஒரு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் காவலில் அடைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். மூன்று நாள் காவலுக்குப் பின் அர்மான் கடந்த திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதய நோயால் அவதியுறும் அர்மானுக்கு இதுவரை மூன்று முறை இதய அறுவைசிகிச்சை நடைப்பெற்றுள்ளது. அர்மானின் குடும்பம் மூன்று மாதங்களுக்கு முன்புதான் டெக்ஸாஸுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
அதிகம் வெளியே சுற்றாமல் வீட்டுக்குள்ளே இருக்கும் அர்மானின் இவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், அவர் மீது வேண்டுமென்றே குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்று அவரது உறவுப் பெண் ஜினி ஹேர் குறிப்பிட்டுள்ளார்.
சில நாள்களுக்கு முன்பு, பள்ளிக்கு கடிகாரம் செய்து வந்த அகமது முகமது கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது சீக்கிய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.