

நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட்-மாவோயிஸ்ட் சென்டர் கட்சித் தலைவர் பிரசண்டா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
நேபாளப் பிரதமராகப் பதவி வகித்து வந்த கே.பி.சர்மா ஓலி கடந்த மாதம் 24-ஆம் தேதி ராஜிநாமா செய்தார். ஆளும் கூட்டணியில் இரு முக்கியக் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாகத் தெரிவித்ததுடன், நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தனர். தனது தோல்வி உறுதி என்ற நிலையில், கே.பி.சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.
புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க கால தாமதம் ஆகும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் இணைந்து இடைக்கால ஏற்பாடாக, தேசிய அரசை அமைக்க வேண்டும் என்று அதிபர் வித்யாதேவி பண்டாரி வலியுறுத்தியிருந்தார். அதன்படி பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் குறித்த அறிவிக்கையை அவைத்தலைவர் ஓம்சாரி கர்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
இன்று காலை பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 573 வாக்குகளில் பிரசந்தாவுக்கு ஆதரவாக 363 வாக்குகளும், எதிராக 210 வாக்குகளும் பதிவாகின . இந்த தகவலை சபாநாயகர் ஓம்சாரி கர்த்தி முறைப்படி அறிவித்தார். இவர் நேபாளத்தின் 39-ஆவது பிரதமர் ஆவார்.
நாடாளுமன்றத்தின் தனிப்பெரும் கட்சியான நேபாளி காங்கிரஸ், மதேசிகள் உள்பட, முக்கிய கட்சிகள் பிரசந்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.