நைரோபி: ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஞாயிறு காலை பேருந்து ஒன்றின் மீது லாரி மோதிய விபத்தில் 30 பேர் பலியாகினர். 16 பேர் படுகாயமடைந்தனர்
கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள பசியா பிரதேசத்தில் இருந்து ஞாயிறு அதிகாலை, பேருந்து ஒன்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நகுரு-எல்டோரெட் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அதிகாலை 3 மணியளவில் நகுரு பகுதியில் இருந்து எதிர் திசையில் வந்த லாரி ஒன்று பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்து மற்றும் லாரியின் ஓட்டுனர்கள் உள்ளிட்ட 30 பேர் பலியாகினர். மேலும் 16 பேர் காயமடைந்தனர். மரணமடைந்தவர்களில் 3 வயது குழைந்து ஒன்றும் அடங்கும். காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக நகுரு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.