பெய்ஜிங்: தைவான் விவகாரத்தில் சீனாவுக்கு சவால் அளிப்பதன் மூலம் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது என்று சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தைவான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவுக்கு வருகை தந்ததற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியாவது:
தைவான் விவகாரத்தில் சீனாவுக்கு சவால் அளிப்பதன் மூலம் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது, இதனால் இந்தியா கடும் இழப்புகளை சந்திக்க நேரிடும்.
எங்களின் 'ஒரே சீனா' கொள்கையை அமெரிக்கா ஆதரிக்கும் நிலையில் தைவான் விவகாரத்தில் இந்தியா எங்களைத் தூண்டும் விதமாக நடந்து கொள்கிறது. இந்தியா மற்றும் தைவான் நாடுகளுக்கு இடையே உயர்மட்ட குழு வருகைகள் என்பது அடிக்கடி நிகழ்வதல்ல. இப்படியிருக்கும் போது தைவான் மகளிர் நாடாளுமன்ற குழுவை இந்த நேரத்தில் இந்தியா வரவேற்றது ஏன்?
இந்தியா.சீனா-பாகிஸ்தான் பொருளாதார ஒப்பந்தங்களுக்குப் பிறகே சீனாவின் மீதான இந்தியாவின் சந்தேகம் அதிகரித்து வருகிறது. சீனாதான் இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளி. இந்தியாவின் இத்தகைய நடவடிக்கைகளினால் இந்த கூட்டுறவு கடினமாகும் சூழலை இந்தியா தானாகவே ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அந்த நாளேட்டில் கூறப்பட்டுள்ளது.