கொழும்பு: இலங்கையில் கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கன மழையினால் உண்டான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 120–ஐ எட்டி உள்ளது.
இலங்கையில் கடந்த 25–ந்தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் நாட்டின் தென்மேற்கு பகுதி முழுவதும் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. இதன் விளைவாக பயங்கரமான நிலச்சரிவும் சில பகுதிகளில் ஏற்பட்டு வருகிறது. ஒட்டு மொத்தமாக சுமார் 14 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை தற்பொழுது 120–ஐ எட்டி உள்ளது. மேலும் 150 பேர் மாயமாகி இருக்கிறார்கள். மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இலங்கையின் முப்படையினர் மீட்புபணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இயற்கை பேரிடரில் சிக்கியுள்ள தங்கள் நாட்டிற்கு உதவுமாறு ஐ.நா மற்றும் அண்டை நாடுகளுக்கு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி அண்டை நாட்டின் துயர்துடைப்பு பணிகளில் இந்தியா இறங்கி உள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 போர்க்கப்பல்கள் நிவாரணபொருட்களுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதே போல மேலும் இரண்டு போர்க்கப்பல்களும் ஞாயிறன்று இலங்கை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.