ஜிம்பாப்வேயில் தொடர்ந்து பதற்ற நிலை: தலைநகர் வீதிகளில் 2-ஆவது நாளாக ராணுவ வாகனங்கள்

ஜிம்பாப்வே நாட்டு நிர்வாகத்தை ராணுவம் கைப்பற்றியதாக அறிவித்தைத் தொடர்ந்து அங்கு தொடர்ந்து பதற்ற நிலை இருந்து வருகிறது.
ஜிம்பாப்வேயில் தொடர்ந்து பதற்ற நிலை: தலைநகர் வீதிகளில் 2-ஆவது நாளாக ராணுவ வாகனங்கள்
Updated on
2 min read

ஜிம்பாப்வே நாட்டு நிர்வாகத்தை ராணுவம் கைப்பற்றியதாக அறிவித்தைத் தொடர்ந்து அங்கு தொடர்ந்து பதற்ற நிலை இருந்து வருகிறது.
ஜிம்பாப்வேயில் அரசு நிர்வாகத்தை ராணுவம் தனது கட்டுக்குள் கொண்டு வந்தாக புதன்கிழமை அறிவித்திருந்தது. அதிபர் ராபர்ட் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். எனினும், இது ஆட்சிக் கவிழ்ப்பு அல்ல எனவும், அதிபருக்கு நெருக்கமாக இருக்கும் சில குற்றவாளிகளைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ராணுவம் விளக்கமளித்தது.
இந்நிலையில், ஜிம்பாப்வே அரசியல் நிர்வாகச் சூழலில் இரண்டாவது நாளாக எந்தத் தெளிவுமின்றி பதற்றமான நிலை நிலவி வருகிறது.
வீதிகளில் வாகனப் போக்குவரத்து காணப்பட்டது. நடைபாதைக் கடைகள் உள்ளிட்ட கடைகள் திறந்திருந்தன. என்றபோதிலும் மக்கள் மனதில் பதற்றம் நிலவி வந்ததாகத் தெரிகிறது. ஆனால் அதிபரின் கட்சியினர் ஆர்ப்பாட்டம் போன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
அதிபர் ராபர்ட் முகாபே இன்னமும் வீட்டுக் காவலில்தான் உள்ளார். ராணுவ வீரர்கள் அவருடைய வீட்டைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர்.
வீதிகளில் ஏராளமான ராணுவ வாகனங்கள் வலம் வந்தவாறு உள்ளன. பல முக்கிய இடங்களில் பீரங்கிகள், ராணுவ கவச வாகனங்களுடன் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 
அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறிய துணை அதிபர் எமர்ஸன் நாங்கக்வாவின் நிலை குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. அவர் நாடு திரும்பவும் ஆட்சியில் அமரவும் ராணுவம் ஒத்துழைக்குமா என்பது பற்றித் தகவல் எதுவும் இல்லை.
இதனிடையே, அன்றாட அரசு அலுவல்களை மேற்கொள்வது குறித்து ஆங்காங்கே உள்ளூர் அரசு அதிகாரிகள் கூடி ஆலோசித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 
நாடு முழுவதும் உள்ள நூறுக்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள் கூட்டாக வியாழக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'அதிபர் ராபர்ட் முகாபே அமைதியான முறையில் பதவி விலக வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளன. எந்தத் தாமதமும் செய்யாமல், அதிபர் பதவி விலகுவதாக முறைப்படி அறிவிக்க வேண்டும் என்று அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு அளித்துள்ள அறிவுறுத்தலில், 'நாடு முழுவதும் வழக்கம் போல நிறுவனங்கள் இயங்க வேண்டும். பணியாளர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். உற்பத்தி நடவடிக்கைகள் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்' என்று தெரிவித்துள்ளன.
பிரிட்டனிடமிருந்து ஜிம்பாப்வே கடந்த 1980-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது முதல் ராபர்ட் முகாபே அந்த நாட்டின் அதிபராகத் தொடர்ந்து ஆட்சிபுரிந்து வருகிறார். தற்போது அவருக்கு 93 வயது. உலகின் மிக அதிக வயதான அதிபர் இவரே.
அண்மைக் காலமாக பொது நிகழ்ச்சிகளில் அவர் உரையாற்றும்போது நாக்குழறுவது போன்ற சம்பவங்களால் அவருடைய உடல் நிலை குன்றி வருவது தெரிய வந்தது. எனினும் அவர் தனது பதவியில் தொடர்ந்து வந்தார். அவர் பதவி விலகி, அவரைவிட 41 வயது குறைவான அவரது மனைவி கிரேஸ் அதிபர் பொறுப்பை ஏற்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இதற்கு ஜிம்பாப்வே ராணுவம் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. 
இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக, துணை அதிபர் எமர்ஸன் நாங்கக்வாவை அதிபர் முகாபே அண்மையில் பதவி நீக்கம் செய்தார்.
இதற்கு ராணுவ தலைமைத் தளபதி கான்ஸ்டென்டினோ சிவெங்கா கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, தலைமை தளபதி சிவெங்காவை தேச விரோதி என அதிபரின் ஸானு-பிஎஃப் கட்சி செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
இதனால், அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே பதற்ற நிலை எழுந்தது. இந்த நிலையில், அதிபர் மாளிகை உள்ளிட்ட அனைத்து நிர்வாக அமைப்புகளையும் ஜிம்பாப்வே ராணுவம் செவ்வாய்க்கிழமை இரவு அதிரடியாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
ராணுவ பீரங்கிகளும், கவச வாகனங்களும் தலைநகர் ஹராரே வீதிகளில் புதன்கிழமை வலம் வந்தன. பாதுகாப்புப் பணியிலும் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியிலும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். அரசு நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும் கூட, இது ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி அல்ல என்று ராணுவம் விளக்கமளித்தது.
அதிபரும், அவரது குடும்பத்தினரும் நலமாக உள்ளனர் என்றும் ராணுவம் தெரிவித்தது. 
இதனிடையே, ராபர்ட் முகாபேயுடன் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக ஜிம்பாப்வேயில் பதற்றமான சூழல் நீடிக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com