இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழப்பு 91 ஆக உயர்வு

இந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழப்பு 91 ஆக உயர்வு
Updated on
1 min read

ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல கட்டடங்கள் சேதமடைந்தன.

பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7 அலகுகளாக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லோம்போக் தீவின் முக்கிய நகரான மேட்டரமில் உள்ள கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் பயங்கரமாக குலுங்கின. இதையடுத்து, அங்கு வசித்தவர்கள் உயிருக்கு பயந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டமெடுத்து சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மிதமாக 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து சுமார் 24 முறை நில அதிர்வுகள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு பிறகு திரும்பப் பெறப்பட்டது. துவிகோரிடா, கர்னாவதி ஆகிய இரு கிராமங்களில் 13 செ.மீ. அளவுக்கு கடல்நீர் ஊருக்குள் புகுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பாலி தீவிலும் உணரப்பட்டது.

ஒரு வாரத்துக்கு முன்பாக இதே லோம்போக் தீவில் 6.4 அலகுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 17 பேர் பலியாகினர். மேலும், நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்தன. 

மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு முடங்கிய போக்குவரத்து தற்போதுதான் சீர் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், மற்றொகு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com