

நைஜீரியாவில் போகோ ஹாராம் எனும் பயங்கரவாத அமைப்பால் கடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுமிகள் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவில் அமைந்துள்ள பள்ளியில் இருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு 300-க்கும் மேற்பட்ட சிறுமிகள் காணாமல் போனார்கள். பின்னர் இவர்களை கடத்தியதாக போகோ ஹாராம் எனும் பயங்கரவாத அமைப்பு அறிவித்தது.
இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன்பின்னர் நடத்தப்பட்ட பலதரப்பு பேச்சுவார்த்தைகளை அடுத்து பலர் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் 100-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுமிகள் அந்த பயங்கரவாத அமைப்பின் பிடியில் வைக்கப்பட்டனர். அவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை.
இந்த பயங்கரவாத அமைப்பு அங்கு கடந்த 2009-ம் ஆண்டு முதல் நைஜீரிய அரசாங்கத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. சில சமயங்களில் தற்கொலைப்படை தாக்குதல்களிலும் ஈடுபடும். இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 மில்லியன் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.
இந்நிலையில், இதே பயங்கரவாத அமைப்பு பிப்ரவரி 19-ந் தேதி நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் இருந்து 104 மாணவிகளைக் கடத்தியது. தற்போது இவர்கள் அத்தனை பேரும் புதன்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.