வாஷிங்டன்: அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலராகாப் பணியாற்றி வரும் ஜேம்ஸ் மேட்டீஸ் தனது பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடக்கிறது. அத்துடன் ஐ.எஸ். தீவிரவாதிகளும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவர்களை வீழ்த்துவதற்காக அமெரிக்க படைகள் அங்கு சென்றன. தீவிரவாதிகள் வசமிருந்த பல நகரங்களை அமெரிக்க கூட்டுப் படைகள் மீட்டுள்ளன.
இந்த சூழலில் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை தோற்கடித்து விட்டதாக கூறி, அமெரிக்க படைகள் அங்கிருந்து வாபஸ் பெறப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டார். இது கலவையான எதிர்வினைகளை எழுப்பியது.
இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலராகாப் பணியாற்றி வரும் ஜேம்ஸ் மேட்டீஸ் தனது பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் இருந்து அமெரிக்க பாதுகாப்பு படை வாபஸ் பெறப்படுவதாக டிரம்ப் அறிவித்த மறு நாளே, பாதுகாப்புத்துறை செயலர் பொறுப்பில் இருந்து ஜேம்ஸ் மேட்டீஸ் விலகியிருப்பது முக்கியமான சம்பவமாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.
ஜேம்ஸ் மேட்டீஸ் ராஜினாமா முடிவினை அதிபர் டொனால்டு டிரம்ப்பும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.