சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடுவானில் பைலட் தூங்கியதால் இறங்க வேண்டிய இடத்தில் இருந்து விமானம் ஒன்று 46 கிமீ தாண்டிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் வடமேற்கு டாஸ்மானியா தீவின் டேவோன்போர்ட் நகரிலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு, பாஸ் ட்ரெயிட் கடல் பகுதியில் உள்ள கிங் தீவை நோக்கி, கடந்த 8-ஆம் தேதியன்று 'சார்ட்டட் பிளைட்' எனப்படும் சிறப்பு பயன் விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருந்தபோதுதான் இச்சம்பவம் நடந்துள்ளது.
மெல்போர்னை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வார்டெக்ஸ் ஏர் விமான நிறுவனம் இதுகுறித்து செவ்வாயன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ள விவரம் வருமாறு:
வார்டெக்ஸ் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான குறிப்பிட்ட விமானமானது இரட்டை இறக்கை கொண்ட பிப்பர் 31 நவாஜோ சிப்டெய்ன் வகை விமானமாகும். குறிப்பிட்ட சம்பவத்தின்போது இவ்விமானத்தில் ஒற்றை ஆளாக இந்த பைலட் மட்டும்தான் பறந்துகொண்டிருந்தார்.
விமானம் பறந்துகொண்டிருக்கும்போது அவர் தற்செயலாக நினைவிழந்து தூங்கியுள்ளார். கட்டுபாட்டு மையத்தில் இருந்து விமானத்தில் இருந்த பைலட்டை தொடர்புகொள்ள முயன்றபோதுதான், விமானத்தில் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு செயல்படாமல் இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது.
இதன் காரணமாக கிங் தீவில் இறங்க வேண்டிய இடத்தில இருந்து 46 கி.மீ.தொலைவினை விமானம் கடந்து சென்று விட்டது. ஆனால் அதன்பிறகு சுதாரித்துக் கொண்டு விமானி விமானத்தை மிகவும் பாதுகாப்பாக குறிப்பிட்ட கிங் தீவில் தரையிறக்கியுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த விமானி யாரென்ற விபரம் மட்டும் வெளியிடப்படவில்லை.