கரீபியன் தீவுகள் அருகே மையம் கொண்டிருந்த டொரியன் புயல், அமெரிக்காவின் புளோரிடாவில் கரையை கடக்கும் என்றும் அந்த சமயத்தில் 210 கி.மீ அளவுக்கு காற்று வீசும் என்றும் தேசிய புயல் எச்சரிக்கை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதிபயங்கரமான டொரியன் புயல், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கரீபியன் தீவுகள் அருகே மையம் கொண்டிருந்த டொரியன் புயல், தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
வருகிற திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இது புளோரிடாவில் கரையை கடக்கும் என்று தேசிய புயல் எச்சரிக்கை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது, அதிகபட்சமாக, மணிக்கு 130 மைல் அல்லது 210 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, புளோரிடாவில் பாதிக்கப்படும் இடங்களாக கருதப்படும் நகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்குள்ள 26 மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜார்ஜியாவில் உள்ள ஒரு சில நகரங்களிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், போலந்து செல்ல இருந்த நிலையில், தனது அரசுமுறைப் பயணத்தை ரத்து செய்துள்ளார். மேலும், புளோரிடாவில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அம்மாநில ஆளுநருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த டொரியன் புயலானது புளோரிடாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.