மொகாதிசு: சோமாலியாவில் தெற்குப் பகுதியில் 40 அல் - ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக, அந்நாட்டின் தேசிய நுண்ணறிவு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
சோமாலியாவின் அரசு படைப்பிரிவான, தேசிய நுண்ணறிவு பாதுகாப்புப் படையானது, அந்நாட்டின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் அல் - ஷபாப் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடி வரும் அல் - ஷபாப் இயக்கத்திற்கு அல் காய்தா அமைப்பினரின் ஆதரவு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
அல் - ஷபாப் இயக்கத்தினர் திங்களன்று சோமாலியாவின் தலைநகரான மொகாதிசுவில் அமைந்துள்ள வணிக வளாகமொன்றில் கார் குண்டுத் தாக்குதல்நடத்தினர். இதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒன்பது பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் சோமாலியாவில் தெற்குப் பகுதியில் 40 அல் - ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக, அந்நாட்டின் தேசிய நுண்ணறிவு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய நுண்ணறிவு பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தெற்கு சோமாலியாவில் உள்ள கீழ் ஷாபெல்லே பகுதியில் உள்ள பார்சோலே கிராமத்தில் சனிக்கிழமையன்று அல் - ஷபாப் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. இந்த தேடுதல் வேட்டையில் 40 அல் - ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.