
குல்பூஷண் ஜாதவ் வழக்கில், சர்வதேச நீதிமன்றம் ஜூலை 17-ஆம் தேதி தீர்ப்பு அளிக்கவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாத செயல்களை தூண்டியதாகவும் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் அரசு கடந்த 2016-இல் கைது செய்தது. அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவருக்கு தூக்கு தண்டனை வழங்கி, 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பை எதிர்த்து நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.
2017-ஆம் ஆண்டில் சர்வதேச நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணை முடிவடையும் வரையில் குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு மீதான விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 4 நாட்கள் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சர்வதேச நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதியான அப்துல்குயாவி அகமது யூசுஃப், வழக்கின் தீர்ப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 17-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாக, அந்நாட்டின் டான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே, குல்பூஷண் ஜாதவ் வழக்கின் தீர்ப்பு ஜூலை 17-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.