பாரீஸ்: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கியுள்ளதாக பிரான்ஸ் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மூலமாக அறிவிக்கச் செய்ய இந்தியா முயற்சிகள் எடுத்து வருகிறது. ஆனால் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான சீனா இந்த முயற்சியை தனது 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி தொடந்து தடுத்து வருகிறது.
புல்வாமா தாக்குதலுக்குப்பின் மீண்டும் அந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.அதன்படி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன.
ஆனால் தற்போதும் சீனா அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதனால் அந்த தீர்மானம் நிறைவேறாமல் போனது, தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகளுக்கும் கடும் அதிருப்தியை தந்தது.
இந்நிலையில் மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கியுள்ளதாக பிரான்ஸ் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவை வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஐரோப்பிய யூனியன் நாடுங்கள் தயாரிக்கும் பயங்கரவாதத்தில் ஈடுபடும் நபர்கள் பட்டியலில் மசூத் அசாரை இணைப்பது தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.