சிகாகோ: கர்ப்பிணியைக் கொன்று குழந்தையை கிழித்தெடுத்த படுபாதகிகள் கைது

கர்ப்பிணியை ஏமாற்றி வீட்டுக்கு வரவழைத்து, அவரது கழுத்தை அறுத்துக் கொன்று, வயிற்றைக் கிழித்து, வயிற்றில் இருந்த குழந்தையை கடத்திய பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிகாகோ: கர்ப்பிணியைக் கொன்று குழந்தையை கிழித்தெடுத்த படுபாதகிகள் கைது
Updated on
2 min read


சிகாகோ: கர்ப்பிணியை ஏமாற்றி வீட்டுக்கு வரவழைத்து, அவரது கழுத்தை அறுத்துக் கொன்று, வயிற்றைக் கிழித்து, வயிற்றில் இருந்த குழந்தையை கடத்திய பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிளாரிஸாவின் (46) மகன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார்.  அப்போதில் இருந்து  அவருக்கு மற்றொரு குழந்தை வேண்டும் என்று விருப்பம் இருந்துள்ளது. ஆனால் அதை நிறைவேற்றக் கையாண்ட விதம்தான் சொல்லில் சொல்ல முடியாததாக உள்ளது.

இந்த செய்தி முழுக்க முழுக்க வார்த்தைகளால் விவரிக்க முடியாத செயல்களைக் கொண்டிருப்பதால், இளகிய மனம் கொண்டோர் மேற்கொண்டு படிக்க வேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம்.

கர்ப்பிணியைக் கொலை செய்த வழக்கில் கிளாரிஸா மற்றும் அவரது மகள் டேஸிரீ(24), கிளாரிஸாவின் ஆண் நண்பர் பியோட்ர் போபக் (40) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

19 வயது மார்லென் ஒசாவோ லோபெஸ் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் காணாமல் போனதாக புகார் வந்தது. அடுத்த நாளே அவரது உடல், கிளாரிஸாவின் வீட்டுக்கு அருகே குப்பைத்தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. ஆனால் வயிற்றில் குழந்தை இல்லை.

விசாரணையில், காணாமல் போன அன்று மார்லென், கிளாரிஸாவுடன் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு இலவசமாக உடை தருவதாக ஃபேஸ்புக்கில் கிளாரிஸா போட்டிருந்த விளம்பரத்தைப் பார்த்து, மார்லென், தனது பள்ளியில் இருந்து கிளாரிஸாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

மார்லென் வீட்டுக்கு வந்ததும், அவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது வயிற்றைக் கிழித்த படுபாதகிகள், கருப்பையில் இருந்த சிசுவையும் வெளியே எடுத்துள்ளனர்.

சில மணி நேரத்தில் 911 அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்ட கொலைகாரி, தனது குழந்தை மூச்சு விட சிரமப்படுவதாகக் கூறியுள்ளார். உடனடியாக விரைந்து வந்த மருத்துவர்கள் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அரிதாகவே உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மார்லென் உடலை வீட்டுக்கு அருகே உள்ள குப்பைத்தொட்டியில் வீசியுள்ளனர்.

ஆனால் அப்போது வரை கர்ப்பிணி இறந்ததும், 911க்கு தொலைபேசி வந்ததையும் காவலர்கள் தொடர்புபடுத்தவில்லை. கொலையான மார்லென்னின் ஃபேஸ்புக்கை ஆய்வு செய்த போது அவர் கொலைகாரி கிளாரிஸாவுடன் பேசியதை கண்டறிந்தனர்.

உடனடியாக கிளாரிஸாவின் வீட்டுக்குச் சென்ற போலீஸ் சில திடுக்கிடும் விஷயங்கள் கண்டறிந்தனர். வீட்டில் இருந்த கிளாரிஸாவின் மகள், கால் அறுவை சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் இருப்பதாகவும், சமீபத்தில் தான் அவருக்குக் குழந்தை பிறந்ததாகவும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்தார்.

அவரது வீடு மற்றும் வாகனங்களை சோதித்த காவல்துறைக்கு ரத்தக் கறை உள்ளிட்ட பல ஆதாரங்கள் கிடைத்தன. மார்லென்னின் உடலை இழுத்துச் செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவிலும் பதிவாகியிருந்தது.

இதற்குள், செத்துக் கொண்டிருக்கும் தனது மகனைக் காப்பாற்ற நிதி உதவி அளியுங்கள் என்று ஒரு விளம்பரத்தையும் கொலைகாரி கிளாரிஸா தொடங்கியிருப்பதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டு அது மார்லென் தம்பதிக்கு பிறந்த குழந்தைதான் என்பதும் உறுதி செய்யப்பட்டுவிட்டது.

கொலை மற்றும் குழந்தையைக் கொலை செய்ய முயற்சித்த வழக்கில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏதேனும் அதிசயம் நடந்து எங்கள் குழந்தை பிழைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும், மனைவியின் கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் மார்லெனின் கணவர் கண்ணீரோடு கதறுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com