சர்வதேச அளவில் மகப்பேறு காலத்தில் தாயோ, சிசுவோ உயிரிழக்கும் சம்பவம் 11 விநாடிக்கு ஒரு முறை நேரிடுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா.வைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகள் வியாழக்கிழமை தாக்கல் செய்த இரு அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான, தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி வரும் நாடுகளில், மகப்பேறு மரணங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.
உலகில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் உயிரிழப்பது கடந்த ஆண்டில் 53 லட்சமாகக் குறைக்கப்பட்டது. இது கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்ததைவிட பாதியாகும்.
இதில் ஏறத்தாழ பாதி மரணங்கள், குழந்தை ஒரு மாதத்தைப் பூர்த்தி செய்வதற்குள் நேரிடுகின்றன.
அதே நேரம், கர்ப்பக் கோளாறுகள், மகப் பேறு போன்ற காரணத்தால் பெண்கள் உயிரிழப்பது கடந்த 2000-ஆம் ஆண்டில் 4.51 லட்சமாக இருந்தது. இது கடந்த ஆண்டில் 2.95 லட்சமாகக் குறைப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 28 லட்சம் பெண்கள் இத்தகைய காரணத்தால் இறந்தனர். அவர்களில் பெரும்பாலானோரது மரணங்கள் மருத்துவத்தால் தவிர்த்திருக்கக் கூடியவை ஆகும்.
மேலும், சராசரியாக ஒரு நிமிடத்தில் நடந்த குழந்தை பிறப்புகளில் 5 மரணங்கள் நேரிட்டன. இதன் மூலம், சுமார் 11 விநாடிகளுக்கு ஒரு மகப் பேறு மரணம் நேரிட்டுள்ளது என்று அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.