உலகம்
ஆஸ்திரேலியாவில் இரவு விடுதி அருகே துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; மூவர் காயம்
ஆஸ்திரேலியாவில் இரவு விடுதி அருகே ஞாயிறு அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இரவு விடுதி அருகே ஞாயிறு அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மாகாணத்தில் பிரஹ்ரான் மாவட்டத்தில் உள்ள லிட்டில் சேப்பல் தெரு மற்றும் மால்வெர்ன் சாலை சந்திப்பு அருகே இரவு விடுதி ஒன்று அமைந்துள்ளது.
இந்த விடுதிக்கு வெளியே ஆஸ்திரேலிய நேரப்படி ஞாயிறு அதிகாலை 3.20 மணியளவில் திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.
விடுதிக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.