இஸ்லாமாபாத்: காஷ்மீர் சர்ச்சை காரணமாக பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ன் வழியாக காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால், மாநிலங்களவையில் திங்களன்றும், மக்களவையில் செவ்வாயன்றும் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக பாகிஸ்தானிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காஷ்மீர் சர்ச்சை காரணமாக பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், 'பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும், அத்துடன் மிக முக்கியமாக இந்தியாவுடனான வர்த்தக உறவைத் துண்டித்துக் கொள்ளவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது' என்று தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இதே விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கான பொறுப்பு தூதராக உள்ள மூத்த அதிகாரியை பாகிஸ்தானுக்கு திரும்ப அழைப்பது என்று அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக செவ்வாயன்று பாகிஸ்தான் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.