இஸ்லாமாபாத்: இந்தியாவில் குறிப்பிட்ட இடத்தை அழிக்க எங்களிடம் 125 -250 கிராம் எடையுள்ள அணுகுண்டுகள் உள்ளன என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹ்மத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் நன்கானா சாஹிப் என்னுமிடத்தில் கட்டப்பட்டு வரும் ரயில்வே நிலையமொன்றை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
இந்தியாவில் குறிப்பிட்ட எந்த ஒரு இடத்தையும் தாக்கி அழிக்க வல்ல 125 -250 கிராம் எடையுள்ள அணுகுண்டுகள் எங்களிடம் உள்ளன.
மோடியின் சிந்தனைகள் என்பது காந்தி மற்றும் நேருவின் சிந்தனைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளன.
இந்தியா இரண்டு மிகப்பெரிய தவறுகளைச் செய்துள்ளது. பாகிஸ்தான் இதுபோலச் செய்யாது என்ற எண்ணத்துடன் அணுகுண்டு சோதனைகளை செய்தது முதல் தவறு.
அதேபோல் காஷ்மீர் மக்கள் எதிர்ப்புக் காட்ட மாட்டார்கள் என்ற எண்ணத்துடன் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது இரண்டாவது தவறு.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.